தமிழக அரசின் ஹிந்து அறநிலைய துறை சார்பில், மூத்த தம்பதியருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்வு நடத்தப்படும் என, அறநிலையத்துறை அமைச்சர், சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, மணிவிழா கண்ட, 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியர், திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் முதல் முறையாக, கடந்தாண்டு நவ., 10ம் தேதி 10 தம்பதியர் கவுரவிக்கப்பட்டனர். இன்று இரண்டாவது முறையாக, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு செய்யப்படும் நிகழ்வு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது. தில்,கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர், 50 மூத்த தம்பதியருக்கு மலர் மாலை அணிவித்து, புடவை, வேட்டி, சட்டை பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல் உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கும்மிடிப்பூண்டி சிறுவாபுரி முருகன் கோவில் சார்பில் இன்று 43 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அனிதா தலைமையில், சிறுவுாபுரி அகத்தீஸ்வரன் கோவிலில் நடந்த நிகழ்வில், செயல் அலுவலர் மாதவன், தலைமை குருக்கள் ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், 2,500 ரூபாய் மதிப்புள்ள, 11 வகை பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பை, தம்பதியருக்கு வழங்கி சிறப்பு செய்தனர்.