குன்றத்துார் சேக்கிழார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உபயதாரர்கள் அளித்த 3.35 லட்சம் ரூபாயில் சமீபத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டது. மேலும், கோவில் அருகில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பசுக்கள் காப்பகம், 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சொற்பொழிவு மண்டபம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன. இதையடுத்து, சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை காலை 11:30 மணிக்கு, சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், மாலை 6:00 மணிக்கு சேக்கிழார் சுவாமி வீதி உலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, காலை 10:00 மணிக்கு, கோவில் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட பசுக்கள் காப்பகம் மற்றும் சொற்பொழிவு மண்டபம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. இந்த கும்பாபிஷேக விழாவில், காஞ்சிபுரம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சேக்கிழார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நித்தியராமன், அறங்காவலர் பத்மினி கண்ணப்பன். கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், நகராட்சி கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.