சூரியனார்கோவில் 30வது ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசார்ய சுவாமிகள் பதவியேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 02:02
தஞ்சாவூர், – தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ஆதினம் 14ம் நுாற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாதினத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதின தம்பிரான் கூட்டத்தில் இருந்து ஒருவரை குருமகாசந்நிதானம் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், 28வது ஆதினமாக இருந்த குருமகாசந்நிதானமாக இருந்த மகாலிங்க சுவாமி பெங்களூரை சேர்ந்த ஹேமா பெண் பக்தர் ஒருவரை பதிவு திருமணம் செய்து கொண்ட விவகாரத்தால் அவர் மடத்திலிருந்து வெளியேறும் சூழல் உருவானது. இதனால் 2024 நவம்பர் 12ம் தேதி ஆதினத்தின் சாவியை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு யாத்திரை புறப்பட்டதாக கூறி வெளியேறினார். தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்தது. ஆதினம் மரபு படி மகாலிங்க சுவாமி குருமகாசந்நிதானமாக நீடிக்க தகுதி இழந்தார் என்றும், சூரியனார் கோவில் ஆதினத்தின் சாவியை மீண்டும், திருவாவடுதுறை ஆதினத்திடம் ஒப்படைக்க அறநிலையத்துறைக்கு நவம்பர் 28ம் தேதி கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, சூரியனார் கோவில் ஆதினம் சாவியை, கடந்த ஜனவரி 13ம் தேதி திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் அறநிலையத்துறையினர் ஒப்படைத்தனர். இந்நிலையில் சூரியனார் கோவில் ஆதினம் ஒடுக்கம் மற்றும் ஆன்மார்த்த பூஜை அறைக்கு வைக்கப்பட்ட சீல் உடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்தது. இந்நிலையில் சூரியனார் கோவில் ஆதினத்திற்கு திருவாவடுதுறை ஆதினம் தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி திருவாவடுதுறை ஆதினத்தின் ஸ்ரீமத் ராமலிங்க தம்பிரான் சுவாமிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து இன்று 12ம் தேதி அவருக்கு ஆதின குருமகாசந்நிதானமாக பீடாரோகணம் அமர வைக்கும் வைபவம் சூரியனார் கோவில் ஆதீனத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளுடன் ஐதீக முறைப்படி நடந்தது. சூரியனார் கோயில் ஆதினத்தின் 30வது குருமகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசார்ய சுவாமிகள் பதவியேற்றார்.