பிருகு மஹரிஷி தவம் செய்த ‘பூலோக சொர்க்கம்’ ஹேமகிரி
பதிவு செய்த நாள்
12
பிப் 2026 02:02
நகரங்களின் பரபரப்பான வாழ்க்கை, வாகனங்களின் சத்தம், ஓய்வில்லா பணிச்சுமை, குடும்ப பிக்கல் பிடுங்கல் என, நெருக்கடியான வாழ்க்கையால் வெறுப்படையும் மக்கள், ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும், அமைதியான சுற்றுலா இடங்களை தேடி செல்கின்றனர். இத்தகையோரை வரவேற்கிறது ஹேமகிரி. பூலோக சொர்க்கம் பசுமை படர்ந்த அழகான மலை, அதன் மீது புராதன கோவில், சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, கண்களை கவரும் பசுமையான வயல்கள், தோட்டங்கள், சலசலவென ஓடும் ஆறு, ஆற்றின் இசையை ரசித்தபடி தலை அசைக்கும் தென்னை மரங்கள், உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்க்காற்று, சுற்றுலா பயணியரை குஷிப்படுத்த, இதை விட வேறு என்ன வேண்டும். இந்த அற்புதமான காட்சிகளை காண, அனுபவிக்க விரும்பினால், ஹேமகிரி மலைக்கு வர வேண்டும். இது, பூலோக சொர்க்கம் என்றே அழைக்கப்படுகிறது. மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் தாலுகாவில், ஹேமகிரி மலை அமைந்துள்ளது. இது, ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இந்த மலையில் பிருகு மகரிஷி தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. வைகுண்டத்தில் இருந்த மஹாவிஷ்ணு, தன் மனைவி மஹாலட்சுமியுடன் சண்டை போட்டு, கோபித்து கொண்டு பூலோகத்துக்கு வந்து நிலை நின்ற இடமே ஹேமகிரி மலையாகும். ரங்கநாத சுவாமியாக அவதரித்து, பத்மாவதியை திருமணம் செய்கிறார். இங்கு பத்மாவதியை மணமுடித்ததால், கல்யாண வெங்கடரமண சுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். எண்ணிக்கை அதிகமாகும் ஹேமகிரி மலையை சுற்றிலும், ஹேமாவதி ஆறு பாய்கிறது. மலையில் பாய்ந்து சென்று, கே.ஆர்.எஸ்., அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றுடன் சங்கமமாகிறது. ஹேமாவதி பாயும் பகுதிகளில், நெல், கரும்பு, தென்னை, பாக்கு உட்பட பல்வேறு பயிர்கள் மற்றும் மரங்கள் செழுமையாக வளர்ந்து, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. ஹேமாவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாயும். இங்கு படகு சவாரி உட்பட நீர் சாகச விளையாட்டுகளை துவக்கினால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று, சுற்றுலா வல்லுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மாண்டியாவின் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஹேமகிரிக்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர். மலையேற்றம் செய்ய இளைஞர்கள், இளம் பெண்கள் வருகின்றனர். கோவிலுக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி, 14ம் தேதி காதலர் தினம் என்பதால், ஹேமகிரி மலைக்கு ஜோடி, ஜோடியாக காதலர்கள் வருவர். எப்படி செல்வது?: பெங்களூரில் இருந்து 155 கி.மீ., மைசூரில் இருந்து 65 கி.மீ., மாண்டியாவில் இருந்து மைசூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில், கே.ஆர்.பேட் உள்ளது. கே.ஆர்.பேட்டில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் ஹேமகிரி மலை உள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, கே.ஆர்.பேட்டுக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வந்தால், மைசூரில் இறங்கி அங்கிருந்து, வாடகை வாகனங்களில் மலைக்கு செல்லலாம். அனுமதி நேரம்: காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரை. அருகில் உள்ள தலங்கள்: ஹேமகிரி நீர் வீழ்ச்சி, மேலுகோட்டே வன விலங்குகள் சரணாலயம், ஷ்ரவண பெலகோலா, தொன்னுார் ஏரி, கே.ஆர்.எஸ்., அணை, ஹொச ஹொலலு. – நமது நிருபர் –
|