மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் சிவாங்கா பக்தர்கள், கோவை ஈஷா யோகா மையத்திற்கு, சிவ யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், சென்னை, உடுப்பி, நாகர்கோவில் பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஆறு இடங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில், சென்னையிலிருந்து வந்த சிவனடியார்கள் குழு, அறுபத்து மூவர் திருமேனிகளை தாங்கிய ஒரு பிரத்தியேக தேருடன் பாதயாத்திரையாக வந்தனர். சிவ யாத்திரை குழுக்கள் அனைத்தும், நேற்று காலை ஆலாந்துறை பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள், 63 நாயன்மார்களை பல்லக்குகளில் ஏந்தி, ஆதியோகி தேர்தலுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். வழிநெடுகிலும், கிராம மக்கள் திரண்டு சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதேபோல, ஈஷாவின் நுழைவு வாயிலான, மலை வாசலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஆதியோகியுடன் பக்தர்கள் தியானலிங்கம் வரை, கைலாய வாத்தியங்கள் முழங்க பவனி வந்தனர். அவர்களுக்கு, ஈஷா சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.