திருப்பூர்: சனிக்கிழமை வரும் பிரதோஷம், சிறப்பு வாய்ந்தது. அதன்படி, நேற்று சிவாலயங்களில் நடந்த பிரதோஷ சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில் என, மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. மாலை, 4:00 மணிக்கு மூலவர் மற்றும் அதிகார நந்திக்கும் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, உமாமகேஸ்வரர் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தீபம் ஏற்றி வைத்தும், ‘ஓம் நமசிவாய’ என்ற கோஷத்துடன் கோவிலை வலம் வந்தும் வழிபட்டனர்.