திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை காண, திரண்ட பக்தர்கள் டிக்கெட் பெறுவதற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, வாரந்தோறும் சனிக்கிழமை நாளில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை, காலை 6-:00 முதல் 12:00 மணி வரை, நான்கு குழுக்களாக பூஜை நடக்கிறது. இதில், பரிகார பூஜை ஒன்றுக்கு, 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்றால் திருமண தடை நீங்கும், குழந்தை கிடைக்கும் என்பதால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை செய்து செல்கின்றனர். இந்நிலையில் வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்ததால், கடந்த வாரம் சனிக்கிழமை பூஜை ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல நேற்று பூஜை துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கான டிக்கெட் பெற, இரண்டு மணி நேரம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.