உசிலம்பட்டியில் மாசிப்பச்சை திருவிழா முடிந்து திரும்பிய மாசிப்பெட்டிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2026 10:02
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழா குலதெய்வ வழிபாடாக கொண்டாடுகின்றனர். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். இதற்காக பிப்.15 காலை 10:30 மணியளவில், உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி வழி பாட்டுக்காக அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசிப்பெட்டிகளை 5 பூஜாரிகள், எட்டும் இரண்டும் பத்து தேவர் குடும்பத்தினர், அக்காமக்கள் குடும்பத்தினர், கோடாங்கிகள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஆதி வழக்கப்படி பக்தர்கள் ‘மாசிப்பச்சை’ கொண்டு சென்று இரவு முழுவதும் வழிபாடு நடந்தது. வழிபாட்டுக்குப்பின், பிப். 16, ல் மீண்டும் பெட்டிகள் உசிலம்பட்டிக்கு சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு திரும்பும் வழியில் வடகாட்டுப்பட்டிக்கு கொண்டு வந்தனர். இரவு முழுவதும் வடகாட்டுப்பட்டி மந்தையில் சிறப்பு பூஜைகள் நடத்திய பின், நேற்று மாலை உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வந்தனர். வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து அய்யன், மாயாண்டி சுவாமிகள் (பாதாளகட்டை) ஆணிச்செருப்பில் நடந்து கோயிலுக்கு வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.