பதிவு செய்த நாள்
25
பிப்
2026
11:02
நத்தம்: -நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவையொட்டி கரந்தமலையில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து நேற்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி புனித தீர்த்தக்குடங்களுடன் சந்தன கருப்பு கோயில் வந்தனர்.
பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள் தீ வட்டி பரிவாரங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர்.
இதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர்.
இதில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். நேற்று இரவு 9:00 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வர கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. பிப்.27, மார்ச் 3,6 ல் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருள மின்ரதத்தில் ஊர்வலமாக முக்கிய வீதிகளில் நகர்வலம் வருதல் நடக்கிறது.
விழா நாட்களில் பக்தர்கள் மாவிளக்கு, கரும்புதொட்டில்,அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10ல் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.
மறுநாள் காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலமாக கோயிலை சென்றடைகிறார். ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், கோயில் பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் செய்கின்றனர்.