திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், சுக்ரகுரு அவதார ஸ்தல சிவதரிசனம், உற்சவர் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர்க்கு திருமஞ்சனம், அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து சுவாமி முத்துப் பல்லக்கில் எழுந்தருளி வானவேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான இன்று காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.