பதிவு செய்த நாள்
03
மார்
2026
08:03
தொண்டாமுத்தூர்; பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடந்த சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் 112ம் ஆண்டு விழாவில், பேரூர் ஆதினத்தில், சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும் என, லலிதாம்பிகை பீட சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சாந்தலிங்க அடிகளார் குருபூஜை விழா மற்றும் சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் 112ம் ஆண்டு விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, அருள்நெறி கொடி ஏற்றப்பட்டது. 9:00 மணிக்கு, திருமுறை வேள்வி நடந்தது. தொடர்ந்து, அம்பலவாணர் திருமஞ்சனம், சாந்தலிங்க பெருமான் திருமஞ்சனம் நடந்தது. அதன்பின், பேரொளி வழிபாடு மற்றும் அன்னம்பாலிப்பு நடந்தது.
பகல், 3:00 மணிக்கு, சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின், 112ம் ஆண்டு விழா நடந்தது. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியின் வணிகவியல் துறை தலைவர் ஜெயப்பிரகாசம் வரவேற்புரையாற்றினார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார். இவ்விழாவிற்கு, லலிதாம்பிகை பீட சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி தலைமை வகித்து, மகிழ்வுரையாற்றினர். அதன்பின், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட, 112 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், லலிதாம்பிகை பீட சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசுகையில்,"சனாதன தர்மம் என்பதில், சைவம், வைணவம், சாக்தம், கணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு சமயங்கள் இருக்கின்றன. இறைவனை அறிந்து கொள்வதற்காகத்தான், வேதங்கள், சாஸ்திர நூல்கள், திருமுறை, தேவாரம், திருவாசகம், சிவபுராணம் ஆகியவைகள் இருக்கின்றன. இவற்றை நாம் தனியாக அறிந்துகொள்ள முடியாது. அதற்கு, நமக்கு கட்டாயம் குரு வேண்டும். மெய்ஞானத்தை உடைய, இந்த பாரத தேசத்தினுடைய, தமிழ் கூறும் நல் உலகத்தினுடைய இந்த சித்தாந்தத்தையும், வேதாந்தத்தையும் தேடி, இன்று லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள், நம் நாட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சனாதன தர்மத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், அதன் சக்தி என்னவென்றால், மெய்ப்பொருள் தத்துவம். அதுவே, முதுகெலும்பாக இருக்கக்கூடியது. இதை தேடித்தான், உலகம் நம்மை தேடி வருகிறார்கள். எனவே, பேரூர் ஆதின மடத்தில், சனாதன தர்ம ஆன்மிக பல்கலை., அமைக்க வேண்டும். அதற்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை ஏற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்,"என்றார்.