பதிவு செய்த நாள்
03
மார்
2026
08:03
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா நடந்தது.
கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி, 16ம் தேதி, கணபதி ஹோமம், கொடி கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. 20ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. 23ம் தேதி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 26ம் தேதி, அம்மனுக்கு பூஜை, வள்ளிக்கும்மி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 27ம் தேதி, திருவிளக்கு பூஜை, அம்மன் அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 28ம் தேதி, விநாயகர், முருகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஜமாப் மேளம், அம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மார்ச், 1ம் தேதி, மாவிளக்கு அலங்கார பூஜை, கோவில் மண்டபம் பூ அலங்காரம், குண்டம் திறப்பு, ஆற்றில் இருந்து பூவோடு கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. இதில், 100கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வேண்டி பூவோடு எடுத்து வந்தார்கள். நேற்று, 2ம் தேதி, பூச்செண்டு மற்றும் கரகங்கள் அழைத்து வர ஆற்றுக்கு புறப்படும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. இதில், ஆண்கள் பெண்கள் என, பக்தர்கள் பலர் சுவாமியை தரிசித்து குண்டம் இறங்கி வழிபட்டனர்.