பதிவு செய்த நாள்
03
மார்
2026
08:03
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது.
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக உள்ள திருநள்ளாறுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமர்ச்சியாக நடைபெறும். இந்தாண்டிற்கான சனிப்பெயர்ச்சி வரும் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு ஸ்ரீசனிபகவான் கும்பராசியில் இருந்து மீனராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சிக்கு பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலை சுற்றியுள்ள கிழக்குவீதி, தெற்குவீதி, ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நிற்பதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் பந்தல் அமைக்கும் பணி துங்கியுள்ளது. மேலும் திருநள்ளாறு ஆன்மீக பூங்காவிற்கு எதிரே உள்ள ஹெலிபேட் மைதானம், தற்காலிக பேருந்து நிலையம், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள், சாலைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்,போக்குவரத்து மாற்றுப்பாதைகள் மற்றும் கூட்ட நெரிசல் தடுக்கும் விதமான நடவடிக்கை மேலும் நளன் குளத்தில் புனிதநீரை பாதுகாப்பு, நளதீர்த்த குளம் முதல் கோயிலுக்கு செல்லும் வரிசை வளாகம், காத்திருப்பு அரங்குகள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் மற்றும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் இஷிதாராட்டி உத்தரவின் அதிகாரிகள் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.