பதிவு செய்த நாள்
03
மார்
2026
02:03
குன்னூர்; அருவங்காடு, குன்னூர் ஐயப்பன் கோவில்களில் நேற்று கொடி மர பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழாக்கள் கோலாகலமாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், அருவங்காடு ஐயப்ப சுவாமி கோவிலில், வருடாந்திர பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நேற்று, புதிய கொடிமர பிரதிஷ்டை விமரிசையாக நடந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரம், தரையில் படாமல் மிகவும் பக்தி சிரத்தையுடன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, பாலக்காடு நிபுணர்களால் கட்டுமான பணிகள் நடந்தன.கார்த்திகை மாதத்தில், எண்ணெய் கலசத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொடிமரம், மூலிகை கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்பட்டது. கொடி மரத்தின் அடித்தளம் அமைத்து பக்தர்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்ட பஞ்சலோகங்கள் அடியில் வைத்து, கொடி மரத்தை சுற்றி பித்தளை தகடுகள் பொருத்தப்பட்டது. கடந்த 1ம் தேதி தேதி பிரதிஷ்டை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை கணபதி ஹோமம், கொடிமர பிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம், அன்னதானம், உச்சி பூஜை நடந்தது. மாலையில் பகவதி சேவை நடந்தது. இன்று கலச பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அருவங்காடு கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
* குன்னூர் ஐயப்பன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, பஞ்சவர்ணம் தீட்டி புதிய கொடிமரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தரண நெல்லூர் பிரம்மஸ்ரீ தந்திரி, பத்மநாபனுண்ணி நம்பூதிரிப்பாடு தலைமையில் நேற்று காலை கொடிமரப் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஐயப்பன் சிவபெருமான் மகா கணபதி விஷ்ணு முருகர் பகவதி ஆஞ்சநேயர் நவக்கிரக தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் உத்யாஸ்தமன பூஜை, படி பூஜை நடக்கிறது 7ம் தேதி காலை கலச பூஜை மற்றும் கலசபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த சங்கத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.