பதிவு செய்த நாள்
05
மார்
2026
08:03
திருப்பூர்: அம்மன் கோவில்களில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள், பொங்கல் வைத்து அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
மங்கலம், சின்னபுத்துார் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. கடந்த, 24ம் தேதி பொரிசாட்டுதல், மினிவிரட்டும் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா துவங்கியது. கடந்த, 2ம் தேதி கோவிலுக்கு கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சி, மேள, தாளத்துடன் நடந்தது; தொடர்ந்து, அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலமும், நேற்று அதிகாலை சுவாமி திருக்கல்யாணம், பொங்கல் மற்றும் அபிேஷகம் நடந்தது. மாலையில், பூவோடு, முளைப்பாரி ஊர்வலம் விமரிசையாக நடந்தது. இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி, நேற்றும், நேற்று முன்தினமும், இரவு, 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது.
ஸ்ரீபட்டத்தரசி அம்மன் சாமளாபுரம் பேரூராட்சி, வேலாயுதம்பாளையம் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டு, 28ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும், பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடி வந்தனர். கடந்த, 2ம் தேதி விநாயகர் பொங்கலும், 3ம் தேதி இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், காலை, 8:00 மணி முதல் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலையில், கம்பம் எடுத்து கங்கையில் விடப்பட்டது. இன்று மஞ்சள் நீர் விழா மற்றும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீமுத்து மாரியம்மன் திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி பிள்ளையார் நகர், ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. கடந்த, 24ம் தேதி பூச்சாட்டு, 1ம் தேதி பொட்டுசாமி பொங்கல், 2ம் தேதி பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா, முத்துமாரியம்மன் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு முத்து மாரியம்மன் உற்சவர் திருவீதியுலாவும், காலை, 8:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.