திருப்பூர்: ‘உலக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் உயர்ந்த ஆன்மாக்களை, பெருமான் தன்பால் ஈர்த்து ஆட்கொள்வார்’ என, பயிற்சி வகுப்பில், சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர்ஹார்வே குமாரசாமி மண்டப வளாகத்தில், திருவருள் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை நடைபெற்று வருகிறது. நேற்றைய பயிற்சி வகுப்பில் கோவையை சேர்ந்த சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: சொந்த பந்தங்களெல்லாம் ஒரு காலத்தில் நம்மை விட்டு விலகிப் போய்விடும். நாம் கூட ஒருகாலத்தில் இந்த உலகிலிருந்து விலகிப்போய்விடுவோம். ஆனால், என்றைக்கும் நம் கூடவே, உயிருக்கு உயிராய் இருப்பவர் இறைவன் ஒருவனே. ஆகவேதான் மாணிக்கவாசகர், ‘உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்’ என்று பாடுகிறார். பெருமான் இன்பம், துன்பம் இல்லாதவர். அவரை நாம் அன்பு கொண்டு வழிபடவேண்டும். அன்பு கொண்டு வழிபடுபவர்கள் மீது, இறைவன் அருள் மழை பொழிகிறார். அதைத்தான் அன்பர்க்கு அருளும் பெருமான் என்கின்றனர். சிவபெருமான் மீதும், உலகிலுள்ள பிற உயிர்கள், மக்கள் மீதும் அன்பு கொண்டு வழிபாடு செய்கிற உயர்ந்த ஆன்மாக்களை, பெருமான், தன்பால் ஈர்த்து, ஆட்கொள்வார். நமது அன்புக்கு பரிசாக இறைவன் அருள் செய்கிறார். ஆகவே, பெருமானை அன்போடு வழிபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.