காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான மாசி மாத பிரம்மோத்சவம் கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும், காலை, மாலையில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தார். இதில், ஏழாம் நாள் உத்சவமான கடந்த மாதம் 27ம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான மார்ச் 1ம் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும் விமரிசையாக நடந்தது. 10ம் நாளான மார்ச் 2ம் தேதி காலை பஞ்சகங்கை தீர்த்தத்தில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, மார்ச் 3ம் தேதி இரவு தங்க காமகோடி விமான உத்சவம் நடந்தது. மார்ச் 4ம் தேதி முதல், விடையாற்றி உத்சவம் நடந்து வருகிறது. இதில், எட்டாம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு சந்தனகாப்பு உத்சவம் நடக்கிறது. மாசி மாத பிரம்மோத்சவத்தின் நிறைவாக நாளை இரவு 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது. இதில், மல்லி, முல்லை, கனகாம்பரம், தவனம், சம்பங்கி என, பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.