உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோவிலில், தெலுங்கு வருட பிறப்பான, யுகாதி பண்டிகை விழா, கடந்த, 4ம் தேதி, புற்று பூஜையுடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, புற்று பூஜை மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடவன் அரங்கத்தில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, விநாயகர் கோவிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பும், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, சுத்தி புண்யாகம், யுகாதி பூஜை, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி – ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, கோ பூஜை, தரிசனம், கண்ணாடி தரிசனம், கன்னிகா பூஜை மற்றும் தரிசனம், ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, பெரிய பூஜை, மகா தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மதிய விருந்தும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.