பதிவு செய்த நாள்
30
மார்
2026
12:03
‘மயிலையே கயிலை, கயிலையே மயிலை’ எனும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் கோவில். பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது; சம்பந்தரால் பூம்பாவையை உயிர்ப்பித்தது; வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றது எல்லாம் இந்த மயிலையில் தான்.
கிராம தேவதை வழிபாடு: கபாலீஸ்வரருக்கு ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. விழாவின் முதல் நாள் கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். அன்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் அருள் பாலிப்பார்.
புன்னை மர வாகனம்: முற்காலத்தில் இந்த நிலப்பரப்பு புன்னைக்காடாக இருந்ததாகவும், அதில், ஒரு புன்னை மரத்தின் அடியில் சிவபெருமான் எழுந்தருளியதாக புராணம் கூறுகின்றன. எனவே, புன்னை மர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
அதிகார நந்தி சேவை: இரண்டாம் நாள் திருவிழாவில் காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் சிவபெருமான் எழுந்தருள்வார். மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்திக் காட்சி சிறப்பு வாய்ந்தது. மாட்டின் முகமும் சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறது.
திரு முலைப்பால் விழா: அம்பிகை, திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருமுலைப்பால் விழா நடத்தப்படுகிறது. மண்டபத்தில் ஞானசம்பந்தரின் திருமேனிக்குப் பால் ஊட்டும் வைபவம் நடைபெறும்போது, பக்தர்கள் குழந்தைகளுக்குப் பாலுாட்டுவர். அப்படிச் செய்வதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.
வாகனங்களின் சேவை: விழாவின் நான்காம் நாள் நாக வாகனத்திலும், ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருமானும், தங்க ரிஷப வாகனத்தில் அம்பிகையும், மயில் வாகனத்தில் முருகனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளுவர். ஆறாம் நாள் யானை வாகனத்தில் இறைவன் எழுந்தருள்வார்.
தேரோட்டம்: பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழா அன்று, வில், அம்பு அலங்காரத்துடன் கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளுவார். திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம்.
பூம்பாவை உயிர்ப்பித்தல்: பங்குனி பெருவிழாவின் எட்டாம் நாள் காலை பூம்பாவை உயிர்ப்பித்தல் திருவிழா மிக முக்கியமானது. மயிலையின் தல வரலாற்றைச் சொல்லும் இந்நிகழ்ச்சி நடைபெறும். தேவனேசனின் மகள் பூம்பாவையை அஸ்தியில் இருந்து, திருஞான சம்பந்தர் உயிர்ப்பிக்கும் காட்சி நடக்கும்.
பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை அறுபத்து மூவர் புறப்பாடு நடக்கும். மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நீளும் இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். கோலவிழி அம்மன், விநாயகர் அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். இதைத் தொடர்ந்து வெள்ளி தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் அறுபத்து மூவருக்கும் காட்சியளிப்பார். அறுபத்து மூவர் உற்சவத்தை முன்னிட்டு, ராயப்பேட்டையில் தொடங்கி மந்தைவெளி வரை அன்னதானம் நடைபெறும்.
சிவா–விஷ்ணு: விழாவின் ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும், மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். அப்போது, மோகினி வடிவில் இருக்கும் மகாவிஷ்ணு நடனமாடியபடி அருள்பாலிப்பார்.
திருக்கல்யாணம்: விழாவின் பத்தாம் நாள் காலை, கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பின், மயில் உருவில் இருக்கும் பார்வதி, புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடும் நிகழ்வு நடக்கும். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானை கரம் பிடிப்பார் அன்னை பார்வதி.