மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 29ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி கொடியேற்றமும், இன்று திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனிடையே திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் நித்திய பூஜை, தொடர்ந்து ராஜ கம்பீர விநாயகர் கோவிலில் இருந்து, மேல தாளத்துடன் சீர் வரிசை எடுத்துவரப்பட்டு, மலை மீது உள்ள கோவில் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பூஜை முடிந்து, உற்சவ மூர்த்திக்கு திருமண பட்டு ஆடைகள் சாற்றப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், செயல் அலுவலர் வனிதா மற்றும் கோவில் பணியாளர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.