வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாயொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. காலை, 8:30 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு பால்குடம் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 10:00 மணிக்கு, உற்சவம் மூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, தங்கமயில் வாகனத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு முதலே, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக இன்று அதிகாலை கோவிலுக்கு வந்தடைந்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மலை மேல் உள்ள கோவிலுக்கு, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.