பதிவு செய்த நாள்
16
ஜன
2013
10:01
பொங்கலை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில், பல வீரர்கள், காளைகளின் அருகிலேயே செல்லவில்லை. இதனால், காளை உரிமையாளர்கள் அதிக பரிசுகளை வென்றனர். திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில், 351 காளைகள் பங்கேற்றன. ஆக்ரோஷமாக பாய்ந்த காளைகளிடம் சிக்கி, 60 காளையர் படுகாயமடைந்தனர். புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.
மதுரை பாலமேட்டில், நேற்று காலை, 8:30 மணிக்கு, காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு விழா துவங்கியது. ஐந்து கோவில் மாடுகள், முதலில் விடப்பட்டன. இதில், 664 வீரர்கள் பதிவு செய்யப்பட்டு, 151 பேர் நீக்கப்பட்டனர்; மேலும், மது அருந்தியதால், 27 பேர் நீக்கப்பட்டனர். மொத்தம், 402 காளைகளில், 37 தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மதியம் 2:00 மணி வரை, 365 காளைகள் வாடி வாசலுக்கு அனுப்பப்பட்டன; வெளியே, 200க்கும் மேற்பட்ட காளைகள் காத்திருந்தன. நேரம் முடிந்ததால், பங்கேற்காத காளைகளை, உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் அழைத்துச் சென்றனர்.
இளைப்பாறிய வீரர்கள்: ஜல்லிக்கட்டு துவங்கியவுடன், 100 வீரர்களுக்கு மேல், வாடி வாசலை சுற்றி நின்றனர். காலை, 10:00 மணிக்கு, இதில் பாதி பேர் ஆங்காங்கே ஓய்வெடுக்கத் துவங்கினர். பத்து காளைகள் வரை, களத்தில் நின்று, "விளையாடின. சில காளைகளை மட்டும், வீரர்கள் விரட்டிப் பிடித்தனர்.""ஏம்பா... மஞ்சள் பனியன் வாங்குறதுக்கா வந்தீங்க... போய் மாட்டைப் பிடிங்கப்பா... வேஸ்ட்டா நின்னு வேடிக்கை பார்க்காதீங்க. வீரா... மாடுபிடி வீரா... என, கிராம கமிட்டியினர், வீரர்களிடம் கெஞ்சல் தொனியில் உற்சாகப்படுத்தியும் பயன் இல்லை. காளையர்களின் உரிமையாளர்கள் அண்டா, பித்தளைப் பாத்திரம், கட்டில், பீரோ, சைக்கிள் உட்பட பரிசுகளை அள்ளிச் சென்றனர். பத்து வீரர்களுக்கு, லேசான காயம் ஏற்பட்டது. காளைகளின் வால், கொம்பைப் பிடித்து இழுத்த, 25க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று நடக்கவுள்ள புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், முதலில், உள்ளூர் காளைகளை பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும். இந்த போட்டியில் பங்கேற்க ஏராளமான வீரர்கள் தயாராகியுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், அதிக அளவில் வர இருக்கின்றனர்.