திருப்புவனம் அருகே மழை வேண்டி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2026 05:04
திருப்புவனம்: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்களில் மழை வேண்டி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருப்புவனம் அருகே கீழராங்கியம் கிராமத்தில் மழை வேண்டி வீரமாகாளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா இன்று மாலை நடந்தது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தாண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமானதால் கண்மாய், ஊரணிகளில் இருந்த தண்ணீரும் ஆவியாகி ஆடு, மாடுகள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. எனவே மழை வேண்டி கீழராங்கியம் வீரமாகாளி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது . கிராமத்தில் வீடுகள் தோறும் விரதமிருந்த பெண்கள் பூக்கூடையுடன் விநாயகர் கோயிலில் ஒன்று கூடினர் . பின் முளைப்பாறி திண்ணையைச் சுற்றி கும்மியடித்து மழை வேண்டி பாடல்கள் பாடிய பின் மேளதாளங்களுடன் ஊர்வலமாக 3 கி.மீ.,தூரமுள்ள வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு வாண வேடிக்கைகளுடன் சென்று அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்