மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், ஆயிரம் ஆண்டுகள், பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், மத்திய இணை அமைச்சரும், அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான, எல்.முருகன் இன்று வருகை தந்தார். கோவில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் விநாயகர், சூரியன், சந்திரன், பைரவர், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அருந்தவ செல்வி அம்மன் மற்றும் மூலவர் மன்னீஸ்வரர் சன்னதிகளில் எல்.முருகன் வழிபாடு செய்தார். சனீஸ்வரர் சன்னதியில் எள் தீபம் ஏற்றி வேண்டினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். முருகன் அங்கு எள் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தார்.
பின்னர் அன்னூர் நகரில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்றார். அங்கு பா.ஜ., வேட்பாளர் எல். முருகன் பேசியதாவது : அவிநாசியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக உருவாக்குவேன். அன்னூர் மற்றும் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அன்னூர் வட்டார விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மேட்டுப்பாளையம், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் அவலத்தைப் போக்க, அன்னூரில் உழவர் சந்தை அமைக்கப்படும். அன்னூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். சொந்த கட்டிடம் இல்லாத அன்னூர் தீயணைப்பு நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் அமைத்து தரப்படும். சாலை வசதி, பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு முழுமையான சாலை வசதி மற்றும் பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். விடுபட்ட குளம், குட்டைகளுக்கு, அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் திட்டம் துவக்கி செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் அம்பாள் பழனிசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகரச் செயலாளர் சவுக்கத் அலி, பா.ஜ., ஒன்றிய தலைவர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.