பாகூர்: கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு மகா திருமஞ்சனம் செய்யப்பட்டது. காலை 9:00 மணிக்கு தட்டு வரிசை வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து, 12.00 மணிக்கு சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலை, 6.00 மணிக்கு கோவில் வளாகம் முழுவதும் 10,008 விளக்குகள் ஏற்றி லட்ச தீப விழா நடைபெற்றது. திரளான பொது மக்கள் பங்கேற்று தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயர் வீதியுலா சென்று அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பெருமாள் (எ) மாறன், உபயதாரர்கள் செந்தில்குமார், பார்த்திபன், சின்னசாமி, செல்வராசு, அதிபதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.