வடவள்ளி: தமிழ் புத்தாண்டையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சுவாமிக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும், பழங்கள் மற்றும் மலர் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தக்கார் ஜெயகுமார் மற்றும் கோவில் துணை கமிஷனர் விமலா ஆகியோர், சுப்பிரமணிய சுவாமி படம், ஒரு ரூபாய் நாணயம் அடங்கிய மஞ்சள் பையை, பக்தர்களுக்கு வழங்கினர். வெயிலின் தாக்கத்தை தணிக்க, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் வழங்கப்பட்டது. பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.