திருச்செந்துார் கோவிலில் அத்துமீறல் திரிசுதந்திரர்கள் நடனத்தால் சர்ச்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 10:04
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணிபுரியும் திரிசுதந்திரர்கள், சித்திரை மாத சஷ்டியை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகளை சமீபத்தில் நடத்தினர். அந்த சமயத்தில், பக்தர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள சண்முகவிலாச மண்டபத்தில் ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள் செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திரிசுதந்திரர்கள் செயலுக்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள் கூறியதாவது: கோவிலுக்கு வரும் முருக பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள சண்முகவிலாச மண்டப பகுதியில், திரிசுதந்திரர்கள் அநாகரிகமான முறையில் ஆட்டம் போடுவதற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது? கோவில் வளாகத்திற்குள் ஆடிப்பாடுவது புனிதத்தை கெடுக்கும் செயல். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். ஆனால், திரிசுதந்திரர்கள் ஆண்டுதோறும் இதுபோன்று நடனம் ஆடி வருவதாகவும், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.