கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கநாதர் கோவிலில், திருவிழாவுக்காக தயாரித்த பட்டாசுகள் வெடித்து சிதறி, 15 பேர் உயிரிழந்ததால் நாளை நடக்கும் திருவிழாவில், வாணவேடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேக்கின்காடு மைதானத்தில் இரு புறம் நேருக்கு நேர் அணிவகுத்து நிற்கும் பாரமேக்காவு பகவதி அம்மன் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களின், தலா 15 யானைகள் அணியும் ஆடை, ஆபரணம் மற்றும் முத்து மணி குடைகளின் கண்காட்சி நேற்று நடந்தது. ‘யானைச்சமயம்’ என்ற இந்தக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். பூரம் திருவிழாவை அறிவிப்பு செய்யும் வகையில், இன்று (25ம் தேதி) காலை 8:00 மணிக்கு, செண்டைமேளம் முழங்க, நெய்திலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவக்குமார் என்ற யானை மீது எழுந்தருளி வடக்குநாதரை வணங்கி, தெற்கு கோபுரம் நடை திறந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடக்கிறது. நாளை, பூரம் விழாவை முன்னிட்டு, விழா நடக்கும், எட்டு உபகோவில்களின் யானைகள் அணிவகுப்பு, பஞ்சவாத்தியம், இலஞ்சித்தறை மேளம், முத்துமணி குடை மாற்றும் நிகழ்வு ஆகியவை கோலாகலமாக நடக்கவுள்ளது.