பதிவு செய்த நாள்
19
ஜன
2013
10:01
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்ட திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.பூலோக வைகுண்டமாக சிறப்பித்து கூறப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் நடக்கும் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. நேற்று காலை, 6.20 மணி முதல், 7 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும், 21ம் தேதி மாலை, 6 மணிக்கு நம்பெருமாள் கருட வாகனத்திலும், 24ம் தேதி திருச்சிவிகையிலும், உபயநாச்சியார்களுடன், பூந்தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார்.
அன்று நம்பெருமாள் நெல் அளவு கண்டருளுகிறார்.வரும், 25ம் தேதி, நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தைத்தேரோட்டோம், 26ம் தேதி நடக்கிறது. அதிகாலை, 3.30 மணிக்கு, நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படாகிறார்.காலை, 4 மணிக்கு, தைத்தேர் மண்டபத்தை அடைகிறார். 5.50 முதல், 6.20 மணிக்குள், மகர லக்னத்தில், நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளு ஸேவை சாதிக்கிறார். 6.30 மணிக்கு, தேர்வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத்தலைவர் சேஷசாயி, கோவில் இணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.