சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி தேரோட்ட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2026 08:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக தினமும் சாமி வீதி உலா நடந்தது. மே 28 ல் திருக்கல்யாணம், 29ல் கழுவன் திருவிழா நடந்தது. 9ம் நாளான நேற்று வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.
காலை 10:30 மணிக்கு பூரணை, புட்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர். மதியம் 3:50 மணிக்கு சந்திவீரன் கூடத்தில் இருந்து நாட்டார்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து, மாலை 4:00 மணிக்கு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து 5:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் தேங்காய்களை தேரடிப்படியில் வீசி உடைத்தனர். தொடர்ந்து தேரடி பூஜை நடந்தது. தேரோட்டத்தையொட்டி காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. நான்கு ரத வீதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். திருவிழாவின் பத்தாம் நாளான இன்று இரவு பூப்பல்லக்கு உற்ஸவம் நடைபெறுகிறது.