நெல்லிக்குப்பம், நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலும் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகம் செய்து சிவனுக்கும், பெருமாளுக்கும் சங்காபிஷேகம் செய்தனர். ஒரே சமயத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒரே சமயத்தில் நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.