பதிவு செய்த நாள்
04
பிப்
2013
11:02
சாஸ்தாம்கோட்டை: சாஸ்தா கோவிலில் தங்க கொடிமரம் அமைக்க, சென்னை முஸ்லிம் வாலிபர், விரதமிருந்து, பணிகளை மேற்கொண்டு வருகிறார். கேரளா, கொல்லம் அருகேயுள்ள சாஸ்தாம் கோட்டையில், சாஸ்தா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், தங்க கொடிமரம் அமைக்கும் பணி, தற்போது, கும்பகோணத்தைச் சேர்ந்த சண்முகம் ஆச்சாரி தலைமையில் நடந்து வருகிறது. சண்முகம் தலைமையிலான குழுவில், சென்னை, ஆலந்தூர், ஆசர்கானா பகுதியைச் சேர்ந்த, மொய்தீன், 30, என்ற முஸ்லிம் வாலிபரும் பங்கேற்றுள்ளார். இவரின் பூர்வீகம் தஞ்சாவூர். நாட்டில், பல இந்து கோவில்களில், தங்க கொடிமரம் அமைத்த பணியில், பங்கேற்ற அனுபவம் இவருக்கு உண்டு. தங்க கொடிமரம் அமைப்பதற்கான, அனைத்து சாஸ்திரங்களையும் நன்கு அறிந்தவர். கோவில் கொடிமர பணிகளில் ஈடுபடும் முன், விரதம் இருந்தே, அந்தப் பணிகளை மேற்கொள்வார். மொய்தீனுக்கு ஆசியா என்ற மனைவியும், மெலிகா, நதியா என்ற இரு மகள்களும் உள்ளனர். மொய்தீனின் தந்தையும், தாத்தாவும், இதேபோல், இந்து கோவில் திருப்பணி வேலைகளில், பல ஆண்டுகள் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.