பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில் உதய நாளையொட்டி, அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேற்று "போன் பயர் ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.மனித குல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்ட ஆரோவில் சர்வதேச நகரம், புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.ஆரோவில் சர்வதேச நகரை வடிவமைக்கும் பணியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். உலகில் மனித இன ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன்முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது.ஆரோவில் குறித்த பொது அறிக்கை, 1965ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 1966ம் ஆண்டில், ஆரோவில் குறித்த திட்டம், யுனெஸ்கோ பொது சபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரோவில்லின் 45வது உதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று காலை 5 மணிக்கு கூடினர்.அங்கு, காலை 5.15 மணிக்கு "போன் பயர் ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானம், 6.15 மணிக்கு முடிவடைந்தது. கூட்டு தியானத்தின் போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது."போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.