பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே, விவசாயி வீட்டின் பின்புறம், வேலி அடைக்க பள்ளம் தோண்டியபோது, சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜ்; விவசாயி. இவர் வீட்டின் பின்புறம், வேலி அடைக்க நேற்று பள்ளம் தோண்டினார். அப்போது, வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. மேலும் தோண்டியபோது, பழங்கால சுவாமி சிலை அடி பீடம், பூஜை தட்டு, பஞ்ச பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. உடன் அப்பகுதியினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். திருத்துறைப்பூண்டி தாசில்தார் வைத்தியநாதன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பொருட்களை கைப்பற்றினர். மேலும் அங்கு, வேறு பொருட்கள் உள்ளதா என, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தோண்டி பார்த்தனர்; வேறு ஏதும் கிடைக்கவில்லை.கண்டு எடுக்கப்பட்ட பொருட்கள், சோழர் காலத்தைச் சேர்ந்தவை என, கூறப்படுகிறது.