பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
குறிச்சி: கோவை, குறிச்சியிலுள்ள கற்பக விநாயகர் மற்றும் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், குறிச்சி குளக்கரையில், பழமையான பொங்காளியம்மன் மற்றும் குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே, "கற்பக விநாயகர், கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேக விழா முன்னிட்டு, 14ம் தேதி சுந்தராபுரம் அரவான் மேடை விநாயகர் கோவிலிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 15ம் தேதி கணேசாராதனம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மற்றும் முதற்கால யாக பூஜை ஆகியவை நடந்தன. 16ம் தேதி த்வாசத சூர்ய பூஜை, தீபாராதனை மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன.17ம் தேதி காலை 9:00 மணிக்கு, மகா கணபதி ஷோடச கலா பூஜை மற்றும் ஐந்தாம் கால யாக பூஜையும் நடந்தன.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, கணேசாராதனம், கர்பகிரக மத்யே பிம்பாராதனம், யாத்ராதானம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் ஆறாம் கால யாக பூஜை நடந்தன.காலை 9:40 மணிக்கு, விமானம் மற்றும் மூலாலய மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தச தானம், தச தரிசனம், அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தன.இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகர் மற்றும் அம்மனை வழிபட்டுச் சென்றனர். மாலை 4:00 மணிக்கு, கற்பக விநாயகர் மற்றும் பொங்காளியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இன்று முதல் மண்டல பூஜை, 48 நாட்களுக்கு தினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் நடக்கிறது.