Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நற்றிணை (பகுதி-3) நற்றிணை (பகுதி-7)
முதல் பக்கம் » நற்றிணை
நற்றிணை (பகுதி-5)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

நற்றிணை - 201. குறிஞ்சி

மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது என்றோய்! மற்றும்,
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்  5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்  10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.  

மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்?

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 202. பாலை

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப்  5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்- வாழியோ, குறுமகள்!- நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல,  10
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.  

இளமடந்தையே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; புலியொடு போர் செய்தலாலே இரத்தந் தோய்ந்து சிவந்த புலவு நாற்றத்தையுடைய செவ்விய மருப்பின் அடியிலே தழைத்த பலவாய முத்துகள் ஒலியாநிற்ப; வலிமிக்கு வலிய மேட்டு நிலத்தின்கணுள்ள வேங்கை மரத்தின் பருத்த அடியை முறித்து; தன் கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையையுடைய களிற்றியானை; தேனைத் தொகுக்கின்ற ஈக்களெல்லாம் ஓடுமாறு அவ் வேங்கையின் பொன் போன்ற பூங்கொத்தாலாகிய உணவைப் பாதுகாத்து நின்று ஊட்டா நிற்கும்; கரிய மலைப் பிளப்பிடங்களைச் சூழ்ந்து அழகுமிக; கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல பூக்கள் நிரம்பிய கோங்கங்கள் அழகு செய்யப்பட்ட நின் தந்தைக்குரிய இக் காட்டினை நீ காண்பாயாக!

உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

நற்றிணை - 203. நெய்தல்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு,  5
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்,  10
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.  

ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும்ந் மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!;

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது. - உலோச்சனார்

நற்றிணை - 204. குறிஞ்சி

தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்  5
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்  10
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?  

மடந்தாய்! தளிர் சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் நீ பின்னர் என்னை முயங்குதி என இனிய மொழிகளைக் கூறி; கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே!

பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மள்ளனார்

நற்றிணை - 205. பாலை

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய், நீயே  5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே- படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய  10
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!  

நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக!

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம். - இளநாகனார்

நற்றிணை - 206. குறிஞ்சி

துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும் என்று, அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க என  5
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!-
செல்வாள் என்றுகொல்? செறிப்பல் என்றுகொல்?
கல் கெழு நாடன் கேண்மை  10
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!  

தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து கூறினான்; அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்!

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - ஐயூர் முடவனார்

நற்றிணை - 207. நெய்தல்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி  5
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால்  10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.  

அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்ந்காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம்ந் வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; இரவில் இளைஞரும் முதியோரும் தம்ந் உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்?

நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

நற்றிணை - 208. பாலை

விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?- சுடர் நுதற் குறுமகள்!-
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,  5
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை,  10
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?  

விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்!

செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது. - நொச்சி நியமங் கிழார்

நற்றிணை - 209. குறிஞ்சி

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்  5
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும்காலைஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!  

மலைச்சார்பிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையாகிய மழை பெய்யும் பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர்; சிலவாய விதைகளைக் கலப்பாக விதைத்து ஒருசேரப் பலவாக விளைந்து சாய்ந்து கதிர் விளங்கிய தினைக்கொல்லையின்கண்; உள்ளாளாகிய மழலை மாறாத இளமடந்தை பேசுகின்ற இனிய குரலைக் கிளிகளும் அறிந்திருப்பனவே; அவ்வினியகுரல் என் அருகிருந்து மிழற்றின் அன்றே எனது காமநோய் தீரும்; அங்ஙனம் அருகிருந்து மிழற்றப்படாது என்னினின்று நீங்கி அகல்வதாயின்; என் அறிவு முதலாய குணங்களுடன் என் உயிரையும் சேர எல்லாவற்றையும் கைக்கொண்டு அகலா நிற்கும்; இப்படியாயின் அவள் இன்றி யான் எவ்வாறு உய்ய மாட்டுவேன்?

குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன். - நொச்சி நியமங்கிழார்

நற்றிணை - 210. மருதம்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்  5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.  

நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; புதுவருவாயினையுடைய ஊரனே!; அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்; இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்; அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்?

தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது. - மிளைகிழான் நல்வேட்டனார்

நற்றிணை - 211. நெய்தல்

யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,  5
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?  

ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; குத்துக்குத் தப்பிப்ந் பிழைத்தோடிய; வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்!

வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது. - கோட்டியூர் நல்லந்தையார்

நற்றிணை - 212. பாலை

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்  5
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி- தோழி!- கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.  10

தோழீ! பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலையைக் கண்டு வெருவி நெடிய காலையுடைய கணந்துள் என்னும் பறவை தான் தனிமையினிருந்து கத்தாநின்ற தௌபிந்த ஓசை; அச்சுரத்தின் கண்ணே செல்லுகின்ற கூத்தாடிகள் தம் வழிவருத்தம் நீங்குமாறு தங்கி விரைவில் ஒலியெழுப்பி இசைபாடுகின்ற யாழோசையோடு சேர்ந்து ஒத்து ஒலியாநிற்கும் அரிய நெறியிலே; கடிய ஒலியையுடைய பம்பையையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருக்கின்ற நெடிய பெரிய குன்றங் கடந்து; நம்முடைய கையிலுள்ளதாகிய செம்பொன்னாற் செய்து பூட்டப்பட்டு இப்பொழுது கழன்று விழுகின்ற தொடியை நோக்கி; நம் (அரிய) சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுகின்ற இனிய குரலைக் கேட்குந் தோறும்; ஆசைகொள்ளுகின்ற மனத்தை யுடையேமாகிய நமக்கு மனமகிழச்சி உண்டாகும்படி; நம்மிடத்து வந்தெய்தினர் கண்டாய்! ஆதலின், இனி நீங்கள் இருவீரும் மனையறஞ் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்வீராக!

பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

நற்றிணை - 213. குறிஞ்சி

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்  5
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது? என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ?-  10
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!  

பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்;

மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

நற்றிணை - 214. பாலை

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு என,  5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ- தோழி!- தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி  10
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?  

தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; என்னை நோக்கி நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்ந்காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் 0சென்ற யாதொரு குற்றமும்ந் இல்லாத நங்காதலர்; என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?;

உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கோசனார்

நற்றிணை - 215. நெய்தல்

குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்  5
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய  10
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.  

சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்;

பகற் குறி வந்து மீள்வானை அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர் எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம். - மதுரைச் சுள்ளம் போதனார்

நற்றிணை - 216. மருதம்

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;  5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்,  10
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.  

புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும்ந் முன்பு அவர் மெய்யை நோக்கி மகிழ்ந்துளேனாதலின்; அங்ஙனமாகக் காணுந் தரத்தினரை நோக்கி யிருந்தாலும் உயிரோடு வாழ்வதினியதாகும், அவ்வண்ணம் காணப்பெறேனாதலின் யான் இனி உயிர்வைத்திருப்பதில் யாது பயன்?, கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறுதுயரம் களையார் ஆயினும் கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கை விலக்குமாறு போல நம்மையுற்ற துன்பத்தை நீக்காராயினும்; அவரில்லாத வூர் இன்னாதாகும், இன்னாதவூரில் யான் இருந்தும் யாது பயன்? ஆதலின் இன்னே துறந்தகலினும் அகலுவன்; குருகுகள் ஆரவாரிக்கும் வயற் கரையிலே கடவுள் ஏறிய எரிபோன்ற பூவையுடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரண் அருகிலே; அயலான் ஒருவன் செய்ததனாலாய கவலை வருத்துதலாலே; ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணியைக் கேட்டவர்கள் அத்தன்மையராயினும்; அவள்பால் அன்பு வைத்தவர் மாத்திரம் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்துபவரல்லர்; அவ்வாறே தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துவளாயினும் மிக்க வேட்கையையுடைய யான் வருந்துந்துணை அவள் வருந்துபவளல்லள்; அங்ஙனமே பிறரும் வருந்துபவரல்லர்

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 217. குறிஞ்சி

இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்  5
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன்- தோழி!- நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.  

தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய நம் காதலன்; பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்!

தலைமகள் வாயில் மறுத்தது. - கபிலர்.

நற்றிணை - 218. நெய்தல்

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌத்தோர்  5
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,  10
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?  

ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; இடங்கள் தோறும் வெளவாலும் பறந்து உலவாநிற்கும்; ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்?

வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில். - காவிதிக் கீரங்கண்ணனார்

நற்றிணை - 219. நெய்தல்

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி- தோழி!- சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்  5
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்-
தானே யானே புணர்ந்தமாறே.  10

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! ; என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்;

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - தாயங்கண்ணனார்

நற்றிணை - 220. குறிஞ்சி

சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர்மன்ற- விசிபிணி  5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே!  10

பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; எம்மைச் சுட்டித் தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர் என்று; எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்;

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம். - குண்டுகட்பாலியாதனார்

நற்றிணை - 221. முல்லை

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,  5
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க- பாக!- நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்  10
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
வந்தீக, எந்தை! என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.  

பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; எந்தாய்! வருக என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக;

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

நற்றிணை - 222. குறிஞ்சி

கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்  5
செலவுடன் விடுகோ- தோழி!- பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?  10

தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்!

தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - கபிலர்

நற்றிணை - 223. நெய்தல்

இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால்  5
எல்லி வம்மோ!- மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.  

மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்; இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்!; ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக!; நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்;

பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - உலோச்சனார்

நற்றிணை - 224. பாலை

அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
பின்பனி அமையம் வரும் என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
புணர்ந்தீர் புணர்மினோ என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்  5
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
பிரியலம் என்று, தௌத்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே- கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய  10
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?  

நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குராமரம் அரும்பு கட்டின; மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்! என்று; தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற் பருவம் வந்திறுத்ததாதலின்; இனி நம் வயிற் பிரியகில்லோம். என்று என்னைத் தௌபிவித்தனர், அங்ஙனம் தௌபிவித்தவராய்ப் பின்பு; குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்?

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ? என்று சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 225. குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை  5
இரந்தோர் உளர்கொல்- தோழி!- திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?  

தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின்கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை ; மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்!

வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

நற்றிணை - 226. பாலை

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!-
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,  5
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.  

அழகிய நுதலையுடையாய்! இவ்ந்வுலகத்து மாந்தர் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்;

பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - கணி புன்குன்றனார்

நற்றிணை - 227. நெய்தல்

அறிந்தோர் அறன் இலர் என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படு மணி யானைப் பசும்பூட் சோழர்  5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது- ஐய!- நின் அருளே.  

ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்!

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது. - தேவனார்

நற்றிணை - 228. குறிஞ்சி

என் எனப்படுமோ- தோழி!- மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான்கொல்லோ தானே- கானவன்  5
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?  

தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ?

தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - முடத்திருமாறனார்

நற்றிணை - 229. பாலை

சேறும், சேறும் என்றலின், பல புலந்து,
சென்மின் என்றல் யான் அஞ்சுவலே;
செல்லாதீம் எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,  5
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை,  10
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?  

நாம் வினைவயிற் செல்வோம் நாம் வினைவயிற் செல்வோம் என்று நீர் பலகாலும் கூறுதலாலே யான் பலவாகப் புலந்து கூறிச் செல்லுவீராக என்று சொல்லுதற்கு அஞ்சாநிற்பேன்; நீர் செல்லாது இங்கே இருமின் என்று சொன்னால் பலருங் கூறும் மார்பிலே தைக்கின்ற அம்பு போன்ற புல்லிய சொல்லினிமித்தமாக எங்கே பழிவந்து மூடுமோ என்று அதற்கும் நான் அஞ்சாநிற்பேன்; ஆதலால் நீர் செல்லுவீராக! சென்று வினை முடிப்பீராக! அங்ஙனம் முடிக்கச் சென்ற அவ்விடத்து நெடுங்காலம் நிற்றலை ஒழியுமாற்றைப் பாதுகாத்துக் கொள்வீராக!; இரவு நடுயாமத்துக் கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி நீயிர் அருகிருப்பீராயினும் இவள் நடுங்காநிற்பள்ந் கண்டீர்!; அத்தகையாள் இப்பொழுது தனியேயிருந்து வருந்துமாறு அகன்ற இடமெங்கும் பரவி நெருங்கித் தண் எனும்படி இயங்குகின்ற பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர்; வந்துநின்ற வாடைக் காற்றையுங் கண்டீரன்றோ? ஆதலின் ஆராய்ந்து ஏற்றது செய்ம்மின்!;

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.

நற்றிணை - 230. மருதம்

முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!  5
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
இனிதே தெய்ய, நின் காணுங்காலே.  10

நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்; கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்!

தோழி வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்

நற்றிணை - 231. நெய்தல்

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே- தோழி!- பண்டும்,  5
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.  

தோழீ! இதன் முன்னும் மனையின் கண்ணேயுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற்போன்ற பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னையஞ் சோலையையுடைய கொண்கன்; கொடுத்த காதலானது நம்மை விட்டு நீங்காமையினாலே : மை அற விளங்கிய மணிநிற விசும்பின் கை தொழு மரபின் எழு மீன்போல மாசு அற விளங்கிய நீலமணிபோன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே தோன்றி உலகத்தாராலே கைதொழப்படுந் தகுதியையுடைய முனிவரின் தோற்றமாகிய ஏழுமீன்களைப் போல; பெரிய கடற் பரப்பின்கண்ணே கரியமுதுகு நனையும்படி சிறிய வெளிய நீர்க்காக்கை பலவும் ஒருசேர நீர் குடையாநிற்கும் கடல் துறையை; யாம் தமியேமாய் நோக்குதற்கு அத் துறை நனி இன்னாமை உடையதாகக் காணுந் தன்மையதாயிராநின்றது;

சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது. - இளநாகனார்

நற்றிணை - 232. குறிஞ்சி

சிறு கண் யானைப் பெருங் கை ஈர்- இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்  5
மா மலை நாட!- காமம் நல்கென
வேண்டுதும்- வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.  

சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; மலையிலே பொருந்திய பாக்கத்து இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்!

பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது. - முதுவெங்கண்ணனார்

நற்றிணை - 233. குறிஞ்சி

கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று  5
கூறுவென் வாழி- தோழி!- முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே.  

தோழீ! வாழ்வாயாக!; தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்!

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - அஞ்சில் ஆந்தையார்

நற்றிணை - 234. குறிஞ்சி

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு  5
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.  

நமரங்காள்!; நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே ஏற்றுக்கொண்டு; இவளை அந் நம்பிக்கே வழங்கின் பெரிதும், நன்று நன்றாகும்; அங்ஙனமின்றி; நம் மகளின் முலைக்கு விலையாக அவர் தரும் பொருளைச் சீர்தூக்குவீராயின்; கழுமலப்போரின்கண் மாற்றாரை அவர்தங் குடையோடே அகப்படுத்திய வெற்றியையுடைய நல்ல தேரினையுடைய சோழன் தலைநகராகிய; பங்குனித்திங்களிலே விழாவெடுக்கும் உறந்தையோடே கூடிய; உள்ளி விழா நிகழ்தற்கிடனான சேரன் தலைநகராகிய வஞ்சிதானும் ஈடில்லாச் சிறிதாய்விடுங் கண்டீர்: ஆதலால் இச் சான்றோர் தரும் பொருளை ஏற்று இவளை அந் நம்பிக்கே ஈதல் நன்று; என்பதாம்.

செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.

நற்றிணை - 235. நெய்தல்

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும்,  5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ- தோழி!-
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.  10

தோழீ! வலிய அலைவந்து மோதிய சருச்சரை பொருந்திய வளைந்த அடியையுடைய அராவுகின்ற வாளரம் போன்ற வாயையுடைய முட்கள் பொருந்திய இலைமிக்க தாழையின்கணுள்ள பூ; பொன் போன்ற மகரந்தத்தையுடைய புன்னைமலரொடு சேர்ந்து மணங்கமழாநிற்கும் இன்னும் பலவாகிய மலர்களையுடைய சோலையில் வைத்த; குறியிடத்திலே பகற் பொழுது வந்து நலனுகர்ந்து நம்முடைய உடம்பின் அழகு கெடும்படியாகப் பெயர்ந்து போயினனாயினும்; தண்ணிய மாலை அணிந்த மார்பின்கண் வண்டுகள் வந்தொலித்து அம்மாலையின் தேனை உண்ணாநிற்ப; ஒலிக்கின்ற மணியணிந்த குதிரைகளைச் செலுத்தி; நெடிய நீரையுடைய நெய்தனிலத்திற்குத் தலைவனாகிய நம்காதலன் வரைவொடு வருகின்றதனை; யாம் சென்று குன்றுபோலத் தோன்றுகின்ற குவிந்த மணலாலாகிய திடர்மீது, ஏறிநின்று கண்டு வருவோம் அதற்காகச் செல்வோமோ? ஒன்று கூறிக்காண்;

வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

நற்றிணை - 236. குறிஞ்சி

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு  5
உரை, இனி- வாழி, தோழி!- புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.  10

தோழீ! நீ வாழ்வாயாக!; எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; நீ விரைந்து சென்று அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள் என்று; அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!;

தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நம்பி குட்டுவன்

நற்றிணை - 237. பாலை

நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?- மடந்தை!-  5
உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!  10

மடந்தாய்!; வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி ஆய்அண்டிரன் சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; இதுகாறும் மிகப் பசந்து தோளும்ந் வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு;

தோழி உரை மாறுபட்டது. - காரிக்கண்ணனார்

நற்றிணை - 238. முல்லை

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை!  5
அவர் நிலை அறியுமோ, ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
கனியா நெஞ்சத்தானும்,  10
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.  

கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; நீ அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள் என்று வருதல்; சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல;

தலைமகள் பருவம் கண்டு அழிந்தது. - கந்தரத்தனார்

நற்றிணை - 239. நெய்தல்

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,  5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,  10
முயங்கு எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?  

மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்ந் வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்ந் வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக! என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?

தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்

நற்றிணை - 240. பாலை

ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே-
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும்,  5
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.  10

கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக!

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம். - நப்பாலத்தனார்

நற்றிணை - 241. பாலை

உள்ளார்கொல்லோ- தோழி!- கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன்,  5
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து,  10
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?  

தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ?

தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரைப் பெருமருதனார்

நற்றிணை - 242. முல்லை

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து  5
செல்க- பாக!- நின் தேரே: உவக்காண்-
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.  10

பாகனே! பழுத்து உதிர்தலானே இலைகளில்லாத பிடாவெல்லாம் மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு முகிழ்ப்ப; புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடி பூக்கள் மலராநிற்ப; கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய; நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கா நிற்ப; இன்று காலைப் பொழுதிலேயே மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்; கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்; அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தொடு சென்று தேடாநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்!; ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக!

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது. - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

நற்றிணை - 243. பாலை

தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு  5
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்! என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,  10
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?  

தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தௌபிந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!; என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தௌபிவாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு;

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - காமக்கணிப் பசலையார்

நற்றிணை - 244. குறிஞ்சி

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ-  5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ-
செய்யாய்: ஆதலின் கொடியை- தோழி!-
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்  10
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.  

தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!;

அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது. - கூற்றங்குமரனார்

நற்றிணை - 245. நெய்தல்

நகையாகின்றே- தோழி!- தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,  5
தௌ தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ? என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல்  10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே  

தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; தௌபிந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தௌபிந்த இனிய சொல்லையுமுடையாய்; எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்!

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. - அல்லங்கீரனார்

நற்றிணை - 246. பாலை

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி,  5
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி- தோழி!- புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
வருதும் என்ற பருவமோ இதுவே?  10

தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்ந்டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தௌபிவியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்!; கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - காப்பியஞ் சேந்தனார்

நற்றிணை - 247. குறிஞ்சி

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ  5
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!  

முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக!

நீட்டியாமை வரை எனத் தோழி சொல்லியது. - பரணர்

நற்றிணை - 248. முல்லை

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்மன்- இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,  5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!  10

மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம் என்று கூறிச் சென்றார்; அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; நீடு வாழ்வாயாக!;

பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது. - காசிபன் கீரனார்

நற்றிணை - 249. நெய்தல்

இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்  5
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ,  10
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?  

இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; வளப்ப மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும்ந் பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கனது தேர்ந் முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?;

வரைவிடை மெலிந்தது. - உலோச்சனார்

நற்றிணை - 250. மருதம்

நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்  5
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
யாரையோ? என்று இகந்து நின்றதுவே!  10

பாணணே! எமது அருகில் வருவாயாக !; பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி யொலிப்ப; தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை; எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் எம்முள்ளம் எம்மைச் செலுத்த யாம் எம் காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றேமாக; அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி; பிணைமான் போல வெருண்டு எம்மை நீங்கி அயலே சென்று நின்று; நீ என்னருகில் வருதற்கு யாவனாந்தன்மையையுடையை என்று இகந்து நின்றதை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே நாம் இருவேமும் நகா நிற்பம்!

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்.

 
மேலும் நற்றிணை »
temple news
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை. நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ... மேலும்
 

நற்றிணை (பகுதி-1) மார்ச் 21,2013

நற்றிணை - 1. குறிஞ்சி நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரேதாமரைத் தண் தாது ... மேலும்
 

நற்றிணை (பகுதி-2) மார்ச் 21,2013

நற்றிணை - 51. குறிஞ்சி யாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு ... மேலும்
 

நற்றிணை (பகுதி-3) மார்ச் 21,2013

நற்றிணை - 101. நெய்தல் முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை ... மேலும்
 

நற்றிணை (பகுதி-4) மார்ச் 21,2013

நற்றிணை - 151. குறிஞ்சி நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,கொல் முரண் இரும் புலி அரும் புழைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar