Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நற்றிணை (பகுதி-7) நற்றிணை (பகுதி-2)
முதல் பக்கம் » நற்றிணை
நற்றிணை (பகுதி-8)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

நற்றிணை - 351. குறிஞ்சி

இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி- வேண்டு, அன்னை!- கருந் தாள்  5
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே.  

அன்னாய்! வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இவள் பெதும்பைப் பருவம் நீங்கப் பெற்றவளென்று; வளம் பொருந்திய மாளிகையிலே பெயர்ந்து போதற்கரிய காவலுட்படுத்தினையாயினும்; சிறந்த இவள் பசப்படைந்தனள் என்பதனை உணர்ந்தனை யல்லையாய்; பல நாளும் துன்பம் பொருந்திய நெஞ்சத்துடனே முருகவேளை விரும்பி இல்லகத் தழைத்து வெறிக்களந் திருத்தி வெறியெடுத்து வருந்தாதே கொள்; கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய சிறிய குன்றினிடத்திலே; சந்தனமரத்தாற் செய்த களிற்றியானையின் வலிமைக்கு அஞ்சாத புலித் தோலால் வேய்ந்த கட்டுப் பரணிடத்திலே தங்கியிருந்து; சிறிய தினைகளையுடைய அகன்ற புனத்தை மறுபடியுஞ் சென்று பாதுகாத்திருப்பாளாயின்; என் தோழி தன் அழகை மீண்டும் பெறாநிற்பள், அது வீணே கழிகின்றது!;

தோழி அருகு அடுத்தது. - மதுரைக் கண்ணத்தனார்

நற்றிணை - 352. பாலை

இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி  5
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள்  10
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!  

இலைவடிவாகிய மாட்சிமைப்பட்ட அம்பை வில்லிலே மாண்புபட இருத்திய உயிர்களிடத்து அன்பில்லாத மறவர்; கொன்று அலைத்தலாலே; அயல் நாட்டினர் பலரும் அவ்விடத்தில் இறந்து கிடந்த செல்லுதற்கரிய சுரத்திலுள்ள கவர்த்த நெறியில் அங்ஙனம் கிடந்த பிணங்களை; அழல் போலுகின்ற சிவந்த செவியையுடைய கழுகின் சேவல் தின்னாவாறு அதனை வெருட்டி அலைத்து; தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற ஊனைத் தின்னுதலில் விருப்ப மிக்க முதிய நரி; பசிய தசையை நிரம்பத் தின்று வாய் வறந்து நீர் பருக விரும்பிப் பேய்த்தேர் விளங்குகின்ற நீரற்ற வறும் புலத்தை நீர் உள்ள இடமென்று சென்று அலைந்து; நீர் ஆங்குக் கிடைக்காமையாலே வருந்திக் கற்குவியலின் நிழலிலேதான் வெயிலுக்கு ஒதுங்கியிருக்கவும் இடம்பெறாது வருந்துகின்ற அஞ்சத்தக்க பலவாய வழி; வருதலானே வருந்திய நமக்கும் கடத்தற்கு அரிய வாயின; இத்தன்மையவாகிய வழியில் மூங்கில் போன்ற தோளையுடைய மாட்சிமைப்பட்ட இளமடந்தையாகிய நம் காதலி தானிருக்கும் மாளிகையினின்று நீங்கி எவ்வாறு வந்தனளோ?: அளியள் இவள் இரங்கத் தக்காள் காண்;

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது. - மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

நற்றிணை - 353. குறிஞ்சி

ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள்  5
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை- எம்
காமம் கனிவதுஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
வெஞ் சின உருமின் உரறும்  10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.  

தேட்டத்திற்குரிய காதலன் இல்லாத தாபதமகளிர் தாம் தேடி உண்ணுமாறு முயன்று நூற்கின்ற நுணங்கிய நுண்ணிய பஞ்சுபோல; கூட்டமாகக் காற்றால் அலையப்படும் மேகந் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த நெடிய மலையிடத்து; முடப்பட்டு முதிர்ந்த பலாமரத்திலுள்ள குடம் போன்ற பெரிய பழத்தின் சுளையை; மலைச்சாரலில் உழுதுண்டு வாழுங் குறவர் தாம் அன்போடு பெற்று வளர்த்து வருகின்ற இளமகள்; கரிய விரலையுடைய மந்தியை வருவிருந்தாக ஏற்றுக்கொண்டு கொடுத்து ஓம்பாநிற்கும்; விசும்பில் நீண்ட மலைநாடனே!; எம்பால் நீ காமம் மிகுதியாகக் கொண்டிருப்பினும்; இரவு நடுயாமத்துக் கரிய புலியைக் கொன்ற பெரிய கையையுடைய யானை கொடிய சினத்தையுடைய இடிபோல முழங்கா நிற்கும்; யாவரும் அஞ்சுகின்ற சிறிய கொடிய வழியின் வருதலானே; நீ சால்புடையையல்லை; ஆதலின் இங்ஙனம் நீ வருதலை நீக்கி வேறு தக்கதொன்றனைச் செய்வாயாக!

தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 354. நெய்தல்

தான் அது பொறுத்தல் யாவது- கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை  5
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப,  10
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே?  

ஐயனே! கழிச்ந்சோலையிடத்துக் காற்றாலசைகின்ற அடியில் உள்ளவற்றை வெட்டி ஒழித்தலானே நெடிய கரிய பனையினின்று விழுகின்ற காவிக் கொணர்ந்த ஓலையைச் சூழ்கின்ற வேலியில் மறைபடக்கட்டிய; கடற்கரைச் சோலையையடுத்த வெளிய மணலையுடைய முன்றிலின்கண்ணே; இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரத்திலே பிணித்துக்கிடத்தலானே; தங்குதல் கொண்ட தோணியையுடைய நீர்த்துவலை தெறித்துவிழும் கடற்கரையிடத்தே; கடுகிய வெயிலினாற் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்புக்களை ஏற்றி நீண்ட நெறியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி யோட்டுகின்ற உப்புவாணிகர்; அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல; நின்னால் செய்யப்பட்ட கேண்மையானது பழிச்சொல்லுக்கிடமாயிராநின்றது; அங்ஙனம் பரந்த அலரால் இற்செறிக்கப்பட்ட யாங்கள் அவ் வில்வயிற் செறிப்பை எவ்வாறு பொறுப்பது? ஆய்ந்து கூறுவாயாக!

தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம். - உலோச்சனார்

நற்றிணை - 355. குறிஞ்சி

புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட!  5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி-  10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே!  

புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல; காந்தளின் பூக்கொத்தொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின்; அந்த மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும் இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகா நிற்கும் மலைநாடனே!; நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து இதனை நீயிர் உண்பீராக! என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்; நீ அத்தகைய நட்புடையனா யிருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; அங்ஙனம் கொள்ளாயேயாயினும்; என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்;

தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.

நற்றிணை - 356. குறிஞ்சி

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்  5
அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை- வாழி, என் உள்ளம்!- ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே?  

என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தௌபிந்த கடலருகு சென்று இரைதேடி அருந்திய; ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய இறகினையும் சிவந்த காலினையுமுடைய அன்னப்பறவைகள்; பொன்பொருந்திய நெடிய கொடுமுடிகளையுடைய இமயமலையின் உச்சியிலிருக்கின்ற தேவருலகின்கண் வாழும்; தெய்வமகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்கு ஆய; சிறகு முளைத்து வளராத தம் இளம் பார்ப்புகளுக்கு இட்டுண்ணும் உணவைக் கொடுக்குமாறு செல்லுகின்றபொழுது; அவற்றின் வருந்துதலில்லாத வலிய சிறகு வருந்தினாற்போல; பலகாலும் என்பால் நின்றும் அவள்பால் ஏகுதலாலே நீ வருந்தாநின்றனை; அதனை யான் நன்கு அறிவேன் காண்! இங்ஙனம் வருந்தியதன் பயனாக இனி மற்றொரு பொழுதிலாயினும் கீழ்பாற்கண் விடியலிலே தோன்றுகின்ற வெள்ளிபோல; நங் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ?; அதனையேனும் ஆராய்ந்து கூறுவாயாக!

வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 357. குறிஞ்சி

நின் குறிப்பு எவனோ?- தோழி!- என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே-
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்  5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.  10

தோழீ! என் கருத்தானது என்னோடு பொருந்தாதாயினும:ந் சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் ஆகாயத்தில் உயர்ந்து நன்றாகத் தோன்றுகின்ற மலையின் பக்கத்தில்; மழைபெய்யுமளவில் அம் மழையிலே நனைந்து மயிர் சிலிர்த்த நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய குடுமியையும் பீலியையுமுடைய மயில் சென்று; உலாவி வருகின்ற சோலை சூழ்ந்த அழகிய இடமகன்ற கற்பாறையில் உற்ற அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையிடத்துள்ள; மையுண்ட கண்ணையொத்த குவளைமலர்களைக் கொய்து; நீராடும்பொழுது அந்நீர் அலைத்தலானே குலைந்த மாலையையுடைய சாரல் நாடனுடனே; அருவியில் ஆடிய நாளினை நினைந்து; எக்காலத்தும் நெஞ்சைப் புண்படுத்திக் கொண்டு கெட்டொழிய அறியாததாயிராநின்றது; அது காரணமாக நின் கருத்துத்தான் எவ்வாறுளதோ? அதனைக் கூறிக்காண்

தலைமகன் வரைவு நீடிய இடத்து, ஆற்றுவல் என்பது படச் சொல்லியது; மனை மருண்டு வேறுபாடாயினாய் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - குறமகள் குறியெயினி

நற்றிணை - 358. நெய்தல்

பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,
நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம்,
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ! என,  5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ- தோழி!-
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என்  10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.  

தோழீ! பெரிய செவ்விய பஞ்சுபோன்ற தலையையுடைய இறாவின் முடங்கலை; சிறிய வெளிய காக்கை நாட்காலையில் இரையாகப் பெறுகின்ற பசிய பூணை அணிந்த பாண்டியனது மருங்கூர் போன்ற; எனது அரிதாகப் பெற்ற நுண்ணிய அழகெல்லாம் கெடும்படியாக; என்னைப்பிரிந்து அங்கே தங்குதற்கு வல்ல தலைவர்; முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள் வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ; நாம் இத் தன்மையேமாதலும் அவர் தம் காதலியைப் பிரிதலால் இவ்வண்ணம் ஆயினாள் என்று என்னைக் கண்டு வெட்கமுற்று; தெய்வத்தை முன்னிலைப் படுத்தி இனி ஒருபொழுதேனும் பிரியேனென்று நின்னுடனே சூளுற்றனராயினும் அங்ஙனம் கூறிய சூள் பொய்த்தலானே அதுகாரணமாக; எவ்வளவேனும் அவரை வருத்தாதேகொள்! அவரைப் பாதுகாப்பாயாக! நீ வாழிய என்று; கணங்களையுடைய அக் கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டு நீர்வளாவிச் சாந்தி செய்து பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினமாகிப் பின்பு வருவோம், அதற்காக ஆண்டுச் செல்வோமோ? ஒன்று ஆய்ந்து கூறுவாய் காண்!

பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன் எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

நற்றிணை - 359. குறிஞ்சி

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,  5
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே- அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?  

மலையின் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசு; அசைகின்ற குலையையுடைய காந்தளைத் தீண்டி அக் காந்தண் மலரிலுள்ள தாதுக்கள் தன்மேல் உதிரப் பெற்றதனாலே நிறம் வேறுபாடுடைமை நோக்கி; அதன் கன்று தன் தாயென் றறியாமல் மயங்காநிற்கும் மலைநாடன், உடுக்கும் தழை தந்தனன் அவை உடுத்திக் கொள்ளுந் தழையைக் கையுறையாகக் கொடுத்தனன், அவற்றை எம் நாட்டினர் உடாராதலின், யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும் யாங்கள் மட்டும் உடுத்திக்கொள்ளின் அன்னை கேட்டற்கு யாது விடை சொல்ல வல்லேமென்று அஞ்சாநிற்பேம்; அத் தழையுடையை மீட்டும் தலைவன்பாற் கொடுத்துவிடின் அதனால் அவன்படும் ஆற்றாமைக்கு அஞ்சாநிற்பேம்; ஆகிய அவற்றிடையே அவனது மலையிலுள்ள போரைச் செய்தலையுடைய வரையாடும் பாய்ந்து செல்லாத; தெய்வம் இருக்கின்ற மலைப் பக்கத்தின்கண்ணே உள்ள கொய்தற்கரிய தழைதாம்; வாடுதலுடைய ஆகலாமோ?

தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது. - கபிலர்

நற்றிணை - 360. மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி,
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,
சென்றீ- பெரும!- சிறக்க, நின் பரத்தை!  5
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்;  10
மற்றும் கூடும், மனை மடி துயிலே.  

பெருமானே! பலரும் இகழ்ந்து கூறுதல் பொறாது வெள்கி விரைவாக; வருந்திய பாகர் இருப்பு முள்ளாலே குத்தி அலைத்தலாலே; துன்புற்றுத் தன் துதிக்கையிடை வைத்ததனை மெய்யின்மேல் வாரி இறைத்துக் கொள்ளுகின்ற யானைக்கன்றுக்கு இட்ட கவளம்போல; மிகப் பெரிதாக நீ யுற்ற நின் சீர்மையை யான் கண்டு மகிழா நிற்பேன்; நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயிலானது பிறிதொரு பொழுதினுங் கூடும்; ஆதலால் மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து போமாறு முறையே கூத்துக்களை ஆடிய; திருவிழா வொழிந்த களத்திலுள்ள கூத்தியைப்போல; அழகுடைய நேற்றைப் பொழுதிலே வந்து நின்னை முயங்கிய பரத்தையருடைய புதிய நலனை யெல்லாங் கொள்ளை கொண்டு; இற்றை நாளால் பாணனாலே கொணர்ந்து தரப்படுகின்ற பரத்தையருடைய மெல்லிய தோளை அணையும் வண்ணம்; விரைந்து செல்வாயாக!; நின்னொடு நின் பரத்தை நீடு வாழ்வாளாக!

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம். - ஓரம்போகியார்

நற்றிணை - 361. முல்லை

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,  5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே.  

சிறிய மலரையுடைய முல்லையினது பெரிதும் மணம் வீசுகின்ற மலரை; நெடிய புகழையுடைய இறைவன் தானுஞ் சூடினன் உடன் வந்த இளைஞரும் சூடினர்; விசும்பைக் கடந்தாலொத்த பொன்னால் ஆகிய கலனை அணிந்த கனைக்கின்ற குதிரைகள்; மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்; ஆதலின் அவள் துனிகூருமென்று நீயிர் கவல வேண்டா?

வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது. - மதுரைப் பேராலவாயர்

நற்றிணை - 362. பாலை

வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும்,  5
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென்- மாஅயோளே!  10

கரிய மாமைநிறமுடைய காதலியே!; இயந்திரமமைந்த கொல்லிப் பாவைபோல இயங்கா நின்று; நின் தந்தையின் மனையெல்லையைக் கடந்து யான் கூறுகின்ற சொற்களை மேற்கொண்டு என்னொடு போந்தனை; ஆதலால்; முதற் பெயலைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சியான மழையையுடைய மேகம் பெய்தலாலே அழகு மிக்க காட்டில்; அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ விளையாடுவாயாக!; யானோவெனில், இளைய களிற்றியானை யுரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற் பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து; ஆறலைகள்வர் முதலாயினோர் சூழ்ந்து போர் செய்ய வரின் அஞ்சாது போர் புரிந்து அவர் ஓடுமாறு பெயர்க்குவேன்; அவ்வண்ணம் நின் சுற்றத்தார் தேடி நின்பின்னே தொடர்ந்துவரின் மறைந்துகொள்ளா நிற்பேன்காண்!

உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இள நாகனார்

நற்றிணை - 363. நெய்தல்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு  5
வம்மோ- தோழி!- மலி நீர்ச் சேர்ப்ப-
பைந் தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே.  10

நிரம்பிய கடல் நீர் பரவிய நெய்தனிலத் தலைவனே!; உடுத்திருந்த பசிய தழையுடை சிதைய மலர்மாலை வாடச் சிலவாகிய விளங்கிய ஒளி பொருந்திய வளைகள் கழல; நன்றாக நேற்று மாலைப்பொழுது நின்னொடு அலவனைப் பிடித்தாட்டிய என் தோழியினுடைய; சிலம்பு உடைபட்டதனாலே; கண்டல் மரங்களை வேலியாகவுடைய புறத்தே கழி சூழ்ந்த கொல்லைகளையுடைய தௌபிந்த நல்ல கடல் நாட்டுத் தலைவன் யானென; நெறிகொண்டு போயினையாயின்; எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; கலன் பொறியற்றுப் போயின் இணைத்துச் சந்து ஊதிக் கூட்டுதற்கு மண் கட்டவேண்டியதன்றே; அங்ஙனம் கட்டுதற்குத் துறையிலுள்ள மணலைக் கொண்டுவந்து தந்து செல்வாயாக!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்தது

நற்றிணை - 364. முல்லை

சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்  5
வாழலென் வாழி- தோழி!- ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப,  10
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.  

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இவ்வாறாகிய நாள் சில கழிவன வாயினும்; முறையே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத குற்றந் தீர்ந்த மாரியுடனே; வல்லோசை பயின்றறியாத சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை; ஊரின்கண்ணே புகுந்து மிக ஒலியாநிற்கும்படி; பலவாய ஆனிரையை நமது தெருவிலே செலுத்திவந்த பிறதொழிலைக் கல்லாத ஆயருடைய; கொன்றைப் பழத்தால் செய்த இனிய புல்லாங் குழல்; இவ்விடனெங்கும் இனிதாக ஒலியாநிற்ப; பிரிந்தோரின் உயிர் உடனே உடலை விட்டு நீங்கும்படி விரைந்து வருகின்ற மாலைப் பொழுதானது; ஒருசேர வந்து கூடினால்; அப்பால் எந்த நாளும் நான் உயிர் வாழ்ந்திரேன் காண்;

தலைமகள் பிரிவிடை மெலிந்தது. - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்

நற்றிணை - 365. குறிஞ்சி

அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
சென்மோ வாழி- தோழி!- பல் நாள்  5
கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே.  

தோழீ! வாழ்வாயாக! பல்நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் நெடுநாள் காறும் மின்னல் முதலாகிய தொகுதியையுடைய மேகம் மழை பெய்யா தொழிந்தாலும் அருவியொலி மாறாது பெருகி வருகின்ற நீர் விளங்கிய பக்கமலைகளையுடைய; ஆகாயத்தின் மீதுயர்ந்த பெரிய மலைநாடனை; நெருங்கி நின்னையடைந்த எம்மை நீ கைவிடுதலானே சால்புடையையல்லை என்று கூறினேமாகி மீண்டு வருதற்கு; அருமையாகிய காவலைச் செய்துடைய அன்னையினது காவல் கடந்து; பெரிய தலைக்கடை வாயிலையும் நீங்கிந் ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தினை யடைந்து; பகற் பொழுதிலே பலருங் காணுமாறு யாங் கொண்டிருந்த நாணினை விடுத்து அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவனது ஊர்; எவ்விடத்து உளதென்று வாயால் வினவியறிந்து சென்று வருவோமோ? ஒன்று கூறுவாயாக!

தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,இன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது. - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

நற்றிணை - 366. பாலை

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி  5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும்  10
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!  

நெஞ்சமே! பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலையணிந்த, நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகிலினுள்ளால் வந்து தோன்றி விளங்குகின்ற திருந்திய இழையணிந்த அல்குலையும்; பெரிய தோளையுமுடைய இளமடந்தையின்; நீலமணி போன்ற கூந்தலை மாசுநீங்கத் தூய்மை செய்து விளக்கி; குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற; மிகப் பலவாகிய மெல்லிய அக் கூந்தலைணையிலே கிடந்து துயிலுவதனை யொழியவிட்டு; கரும்பின் வேல் போல்கின்ற வெளியமுகை பிரியும்படி தீண்டி; அறிவுமிக்க தூக்கணங் குருவி தான் முயன்று செய்த கூட்டினை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதுகின்ற; வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசுங்கூதிர்ப் பருவத்திலே பிரிபவர்; இவ்வுலகத்திலே அறியாமை மிக்குடையராவார்,

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

நற்றிணை - 367. முல்லை

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்  5
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
இளையரும் சூடி வந்தனர்: நமரும்  10
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர், இப் பனி படு நாளே.  

வட்டமாகிய கண்களையும் கூரிய வாயையும் உடைய காக்கைப் பேடை; நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டு; சுற்றத்தையும் விளித்து; கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத் திரளையைத் தெய்வத்துக்கிடும் பலியுடனே கவர்ந்து கொள்ளுமாறு; குறிய கால் நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய நல்ல மனையின்கண்ணே கூடினவாயிருக்கும்; பழைமையான வீடுகளையுடைய அருமன் என்பவனது பெரிய புகழ் பொருந்திய சிறுகுடி என்னும் ஊரிலிராநின்ற; மெத்தென்ற சாயலையுடைய அரிவையே!; நினது பலவாகிய கரிய கூந்தலிற் சூடிய மாலை போலக் குவளை மலரொடு இடையிட்டுத் தொடுத்த நறிய பூவையுடைய முல்லையின் மூட்டுவாய் அவிழ்ந்த மலராகிய; தண்ணிய நன்மணமுடைய பூமாலையை; உடன் சென்றிருந்த வீரரெல்லாருஞ் சூடி வந்தனர்; அதனால் இப் பனி மிக்க பருவத்திலேதானே நங்காதலரும் ஆண்டுத் தங்கி வருந்தாது; விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக் கொண்டு இன்னே வருகுவர்; ஆதலின் வருந்தாதே கொள்!

வரவு மலிந்தது. - நக்கீரர்

நற்றிணை - 368. குறிஞ்சி

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த  5
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும், நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,
வெய்ய உயிர்த்தனள் யாயே-
ஐய!- அஞ்சினம், அளியம் யாமே!  10

ஐயனே! பெரிய புனத்திலுள்ள தினைக்கதிர்களைக் கொய்து கொண்டு செல்லுகின்ற சிறிய கிளிகளை வெருட்டி; கரிய அடியையுடைய வேங்கை மரத்திலே தொடுத்த கயிற்றூசலில் ஏறி ஆடிப் பக்கம் உயர்ந்த அல்குலுக்குத் தழையுடை அணிந்து; நும்முடனே அருவியாடி விளையாட்டு அயர்ந்தேமாய் வருதலினுங்காட்டில்; இனியதொரு காரியமுளதாகுமோ?; நெறிப்பமைந்த கருமை முதிர்ந்திருந்த கூந்தலில் நறுமணங் கமழ்தலைக்கொண்ட நல்ல புது நாற்றத்தையும்; பசலை பரவிய சிறிய நெற்றியையும் நோக்கி; பயனின்றிச் சிதைந்த உள்ளத்தையுடையளாய் எம் அன்னை; பிறிதொன்றனைச் சுட்டி நின்றாள் போல வெய்யவாகப் பெருமூச்செறிந்து வெகுளா நின்றனள்; அதனால் யாம் இல்வயிற் செறிக்கப்பட்டுப் பிறரால் இரங்கத்தக்க தன்மையேமாய் அஞ்சாநின்றேம்;

தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்

நற்றிணை - 369. நெய்தல்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்  5
அறியேன் வாழி- தோழி!- அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்  10
நிறை அடு காமம் நீந்துமாறே.  

தோழீ! வாழி; ஆதித்த மண்டிலம் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அத்தமனக் குன்றைச் சென்றுபுக; நிறைந்த சிறையையுடைய நாரையின் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் செல்லாநிற்ப; பகற் பொழுதை மெல்ல மெல்லப் போக்கி முல்லையரும்பு வாய்திறந்து மலராநிற்கும் பெரிய புல்லிய மாலைப் பொழுதானது; நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருவதாயினோ; பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியின்கண்ணே; வானிடத்தினின்று இழிதரும் வயங்கிய வெளிய அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை; கரை கடந்து இழியாநின்ற அணையை உடைத்துச் செல்லுங் கடிய செலவினையுடைய நீர் வெள்ளம் போன்ற; எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்துமாறு நன்றாகத் தெரிந்தேனு மில்லையே! எவ்வாறு உய்குவேன்?

பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

நற்றிணை - 370. மருதம்

வாராய், பாண! நகுகம்- நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித்  5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி? என,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,
முகை நாண் முறுவல் தோற்றி,  10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.  

பாணனே! என்னருகு வருவாயாக!; நேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து; நெய்யுடனே கலந்து ஒளிர்கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை; நெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்!; நீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ? என்று கூறி; பலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; முல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து; சிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றது; அதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்!

ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம். - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

நற்றிணை - 371. முல்லை

காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்:  5
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்-
தழங்கு குரல் உருமின் கங்குலானே.  

பாகனே! இதுகாறும் மழைபெய்யாதிருந்த மேகங்கள் நிறைய மலர்ந்திருக்கின்ற காயா மரங்களையுடைய மலையின்கண்ணே இடையே சரக்கொன்றை மலர்ந்தாற்போல; பெரிய மலைப் பிளப்பிடங்கள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி; என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருந்த இடம் நோக்கிச் சென்று; அகன்ற கரிய ஆகாயத்தினிடம் எல்லாம் மறைபடும்படி பரந்து மழை பெய்யத் தொடங்கிவிட்டன; ஆதலால் ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் கழன்றுவிழத் திண்ணமாக ஏக்கமுற்று அழத் தொடங்கினளேயாம்; அவள் அழுமிடத்துக்கு எதிரே இராப்பொழுதில் முழங்குகின்ற இடியோசை போலக் கோவலர் புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினவராவார்;

வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது. - அவ்வையார்

நற்றிணை - 372. நெய்தல்

அழிதக்கன்றே- தோழி!- கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு  5
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப- மனை இருந்து,  10
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே.  

தோழீ! கடற்கரைச் சோலையிலுள்ள பனையின் தேனையுடைய அழிந்த பழம்; மூக்கு இற்றுக் கழியை அடைந்து பெரிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு அள்ளுதலமைந்த கரிய சேற்றிலே புதையும்படி விழுந்ததனால்; அவ்வோசைக்கு அஞ்சிந்ச் சுற்றத்தையுடைய நாரைகள் இனத்தோடு இரிந்தோடாநிற்கும் நீர்த்துறையையுடைய நின் காதலன்; வளையாகிய சங்கு போன்ற வெளிய மணலையுடையதாகிய இடத்தில்; முயங்க விரும்பிய நினது பெருந்தகை கொண்ட உள்ளத்தொடு பொருந்துமாறு; மகளிர் இல்லின்கண் இருந்து வருவிருந்தோம்பும் இயற்கையாலே; கரிய கழியிடத்து மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்கும் பரதவருடைய; திண்ணிய மீன் படகிலிருக்கும் விளக்குகளை எண்ணுகின்ற; கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழி சூழ்ந்த நம்முடைய நல்ல ஊரானது; இனிதாக நோக்கி அன்னை நினக்குக் கொடுத்த அசைகின்ற குழையுடைய பெரிய கோடு குலைதலாலே நீ வருந்துவது போலக் கருதி அஞ்சி நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே கொள் என்று கூறாநிற்கும்; இங்ஙனம் கூறுவதனால் இல்வயிற் செறியார்; ஆதலின் நீ மனம் அழிவது தகுதியுடையதன்று காண்!

மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 373. குறிஞ்சி

முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி,  5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?  

தோழீ! இன்று அன்னை நம்மை நோக்கி ஐயப்பாடெய்தி இல்வயிற் செறிப்பக் கருதியதனால் மெல்லிய தலையையுடைய மந்தி இல்லின்முன்புள்ள பலாமரத்திலிருந்து அதன் பழத்தைக் கீண்டு நிறைந்த சுளைகளை யுண்டு அவற்றின் வித்தினைக் கீழே யுதிர்ப்ப; அயலிலே நின்ற கொடிச்சி தன் தந்தையினது மேகந்தவழும் கரிய மலைவளம் பாடி வெளிய ஐவன நெல்லைக் குத்துகின்ற மலைநாடனாகிய நம் காதலனொடு; அச்சஞ் செய்யும் மலைப்பக்கத்திலுள்ள அருவியாடிக் கரிய நிறத்தையுடைய அரும்பு மலர்ந்த சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரத்தின்மேலே கட்டிய; பரப்பமைந்த பரண்மீது ஏறி; வளைந்த கதிர்களையுடைய சிறிய தினைப்புனத்தின்கண்ணே வருகின்ற பசிய கிளியினத்தைக் கடிந்து போக்குமாறு; இன்றிருந்தது போல நாளையும் நமக்குப் பொருந்துவதாமோ? அங்ஙனம் பொருந்தாது போலும்;

செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்

நற்றிணை - 374. முல்லை

முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே- பிற்றை  5
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?  

பரல் நிரம்ப மேலே பொருந்திய சென்று சேர்தற் கியலாத நெறியில் உயர்ந்து தோன்றும் உப்பு வாணிப மக்கள் நிறைந்திருக்கின்ற சிறிய குடிகளையுடைய; களர்நிலத்தில் விளைந்த புளியின் கனியைச் சுவைத்து உண்டு நும்மை வருத்துகின்ற பசியைப் போக்குதலானே; மீட்டும் நெறியிலே செல்லும் வன்மை மிக்குடையீராய் உச்சி மேற் கொண்ட உயர்ந்த குடையையுடைய புதிய மாந்தர்காள்; இது காறும் பிரிந்ததனால் பிரியும் பொழுதின்றி அதன்பின்பு வருந்திக் கண்ணீர் வடிந்து விழுதலாலாகிய புள்ளி கொங்கையை நனையா நிற்ப; யாம் புதியேமாகி வருதலின் எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய்; அட்டிற்சாலை புகுந்து உணவு அமைக்குந் தொழிலில் வருந்துகின்ற விரும்பிய கரிய மணியின் தன்மையுடைய அலங்கரித்த நெடிய கூந்தலையும் திருந்திய கலன்களையும்; இனிய மொழியையுமுடைய மடந்தையினிலையை இதன்முன்பும் இவ்வாறிருக்க முழுதும் பெற்றுடையேமோ? இல்லைகண்டீர்! இப்பொழுதுதான் பெறலாகியதே! இஃதென்ன வியப்பு;

வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. - வன் பரணர்

நற்றிணை - 375. நெய்தல்

நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப,  5
வருவைஆயினோ நன்றே- பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.  

நீண்ட கிளையையுடைய புன்னையின் நறிய மகரந்தம் உதிரும்படி அக் கிளைகளின்மீது அலங்கரித்தாற்போன்று வைகிய நாரையின் கூட்டம் இரை வேண்டிப் பெயர்ந்து உலாவாநிற்கும்; பலவாகிய மலர்களையுடைய கடற் கரைச் சோலையையும் மிக்க உவர்நீரையுமுடைய நெய்தனிலத் தலைவனே!; நீ பலகாலும் வந்து முயங்கியும் எம்பால் அன்புடையை அல்லை; அங்ஙனம் அன்புடையையா யிருப்பின் அவளுடைய அறிவின் வழியே ஒழுகுகின்ற என்பாலும் சொல்லுவதற்கு வெள்குகின்ற நல்ல நுதலையுடையாளாகிய அத்தலைவி உவக்கும் வண்ணம்; பெரிய கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த்திங்கள் தோன்றுதலானே அதுகண்ட வலிய அலைகள் மோதுவனபோல எழுந்து வாராநிற்கும் உயர்ந்த மணல் நிரம்பிய கொல்லைகளையுடைய; யாம் உறைகின்ற எம்மூரிடத்து நீ அவளை மணஞ்செய்து கொள்ளுமாறு வரல் வேண்டும்! அவ்வாறு வருவையாயின் அது மிக நல்லதொரு காரியமாகும்;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது. - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

நற்றிணை - 376. குறிஞ்சி

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,
வரையோன் வண்மை போல, பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!
குல்லை, குளவி, கூதளம், குவளை,  5
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி,  10
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே?  

முறம்போலுஞ் செவியையுடைய யானையினது வளைந்த கைபோல வளைந்து தலைசாய்ந்த கதிர்களையும் பசிய அடித்தண்டினையும் உடைய செவ்விய தினையை; வரையாது கொடுப்பவனது கைவண்மைக்கு ஈண்டும் பரிசிலர்போலப் பலவாகிய சுற்றத்தொடு நெருங்கிவந்து உண்ணாநின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டமே!; தலைவனை முன்பு முயங்கி அவனை நீங்கிய பின்னர் அறநெறியிலே நில்லாத எம் அன்னை எம்மை வருத்தி; காவலின்றி அழிகின்ற தினைப்புனத்தினை யாங் காவல்செய்யவிடாது இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே; இதன்பின்பு வெறியெடுத்தலாலே முருகவேளும் எம்மை வருத்தும் போலும்; ஆதலின் குல்லை மலைப்பச்சை கூதாளி குவளை தேற்றா என்பனவற்றின் மலராற் புனைந்த மிகக் குளிர்ந்த பூமாலையை யுடையவனும்; வரிந்து கட்டிய அமைந்த வில்லையுடையவனுமாகி அசோகமரத்தின்கீழ் வந்துநிற்கும் நல்ல மாலையணிந்த மார்புடைய அவனை நீயிர் காண்பீராயின்; இங்கு நிகழ்ந்த எல்லாவற்றினையும் கூறாது விடினும் சிறிய சிலவற்றையேனும் அறிந்து கொள்ளுமாறு நன்றாக அவனுக்கு உரையுங்கோள்!

தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்

நற்றிணை - 377. குறிஞ்சி

மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ-  5
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?  

அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல; ஒளி வீசுகின்ற கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடையாள்; யாம் நினைக்குந்தோறும் எம்மெதிரே தோன்றி எம்மை வினாவி மெலியப் பண்ணாநிற்கும், அதனால் எமக்குக் காமநோய் நனி மிகாநின்றது; அது தீருமாறு பனை மடலாலே செய்த குதிரையேறி நடத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை என்பனவற்றின் மலரை விரவித் தொடுத்த மாலையணிந்து இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுகள்தோறும் ஊர்கள் தோறும் சென்று ஒள்ளிய நெற்றியையுடைய அவளது அழகைச் சிறப்பித்துக் கூறி; அம் மடலேறுந் தொழிலில் செல்லேமாகி; எம் முள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அதுவே நோயாகக் கொண்டு கிடந்து; இறந்துபோக மாட்டேமோ? அங்ஙனம் மடலேறிப் பலராலும் இகழப்பட்டுத்தான் முடிய வேண்டும் போலும்! மடலேறுதலினும் உயிர்துறந்தொழிதல் நலனன்றோ?

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது. - மடல் பாடிய மாதங்கீரனார்

நற்றிணை - 378. நெய்தல்

யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும்,  5
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால்- தோழி!- ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி,  10
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே  

தோழீ! இரவு நடுயாமமும் நெடும்பொழுதுடையவாகிக் கழியாநிற்கும்; எமக்குளதாகிய காமமும் கண்ணுறங்கவொட்டாது பெருகாநிற்கும்; தௌபிந்த கடலின்கண்ணே முழங்குகின்ற அலைகளும் முழவோசை போல மெல்லமெல்ல ஒலித்து நெடுநாட் புண்ணுற்றாரைப் போலப் புரண்டு புரண்டு அக் கடலிடத்து அசைந்து இயங்காநிற்கும்; அவை அவ்வண்ணம் நம்மை வருத்தாநிற்கவும் நீங்கி இராப்பொழுதைக் கடந்து ஞாயிறு தோன்றினபாடில்லை; உயர்ந்த மணற் பரப்பிலே புனைந்து கோலமிட்ட சிறிய மணற் சிற்றிலைச் சிதைத்து நம்பால் வந்து; அன்பு மிகும்படி கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு; பக்கத்தில் ஒலிக்கும் குளிர்ச்சியையுடைய கடற்கரைத் தலைவனுடனே முன்பு இவன் இத்தன்மையன் என்று ஆராய்ந்து பாராது உடன் பட்டதனாலாகிய நட்பின் அளவானது; பழிச்சொற் கூறும் வாயையுடையஅயல் வீட்டு மாதர்கள் எம்முடைய நெற்றியிலுண்டாகிய பசலையைக் குறித்துப் பலவாய இழிந்த பாடல்களைக் குறிப்பாக எவ்விடத்தும் பாட; இவ்வாறு இழிதகவெய்தப் பண்ணியது கண்டாய்;

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

நற்றிணை - 379. குறிஞ்சி

புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய
தேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி  5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த,
பெயல் உறு நீலம் போன்றன விரலே,
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது,  10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே.  

ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின்கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய குடவாயில் என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள் நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக!

தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்

நற்றிணை - 380. மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்  5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;
கொண்டு செல்- பாண!- நின் தண் துறை ஊரனை,
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்  10
புரவியும் பூண் நிலை முனிகுவ;
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!  

பாணனே! எம்முடைய ஆடைதானும் நெய்யும் நறும்புகையும் அளாவிப் புதல்வதற்குத் தீட்டும் மையும் இழுகி அழுக்குப் படிந்திரா நின்றுது; சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனியபால் பெருகுதலாலே அந்தப் பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக் கொண்டு எம் தோளும் ஈன்ற அணிமையானாகிய முடைநாற்றம் வீசாநிற்கும்; இங்ஙனம் ஆகையில் தூய இழையணிந்த பரத்தையர் சேரிக்கண்ணே தோன்றுகின்ற தேரையுடைய காதலன் கூடுதற்குரிய தகுதிப்பாடுடையேமல்லேம்; ஆதலின் நின் தண்ணிய துறையையுடைய அவ்வூரனை இப்பொழுதே கொண்டு சென்று பரத்தையர் பால் விலைகொண்டு ஈடாக உய்ப்பாயாக!; பொன்போன்ற நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழையெடுத்துப் பாடுதலில் நீ வல்லனே யாயினும்; ஈண்டு எம்மைத் தொழுது படாதேகொள்; சிறந்த எமது மனையின்கண்ணே நீ நின்று பாடுதலைச் செய்யாதபடி நெடும் பொழுது நிற்றலையுடைய தேரிலே பூட்டிய குதிரைகளும் தம்மைப் பிணித்திருத்தலை வெறுக்கின்றன கண்டாய்; யாம் விரும்பியது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற்களை எம்பால் மொழிய வேண்டா!

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - கூடலூர்ப் பல்கண்ணனார்

நற்றிணை - 381. முல்லை

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை  5
யாங்கனம் தாங்குவென் மற்றே?- ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே.  10

தலையெடுத்து நடக்கும் உயர்ந்த விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையும் விரைந்து செல்லும் குதிரைப் படையுமுடைய அஞ்சியென்பான் குளிர்ந்த உள்ளத்தால் ஆராய்ந்து நீண்டகாலம் தன்பெயர் விளங்கி நிற்குமாறு இரவலர்க்குத் தேர்களைப் பரிசு கொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல; மேகம் மழை பெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது; என் காதலர் வருவேமென்ற இப்பருவத்தில் அவர் வாராமையாலே தாங்குதற்கரிய துன்பத்தை நுகர்தலின் அறிகுறியாக இதுகாறும் யான் இறந்தொழியின் அவர்பால் அன்புடையேன் என்பது உண்மையாகும்; அவ்வாறு இறந்தொழியாமையின் அன்பிலேன் அல்லேனோ?; அவ்வண்ணம் அன்பில்லாதேனை அவர் அருளாராயினும் கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில் வேர்களெல்லாம் அலசப்பட்டுத் தோன்றிக் காற்றாலலையும் மாமரத்தின் அழகிய தளிர்போல; நடுங்குதல் நீங்காத நெஞ்சுடனே இத்துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்?

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது. - அவ்வையார்

நற்றிணை - 382. நெய்தல்

கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி,  5
ஆர் உயிர் அழிவதுஆயினும்- நேரிழை!-
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.  

நேர்மையான கலன்களையுடைய தோழீ! பரவுதல் கொண்ட கடல்நீரின் தண்ணிய துறைக்குத் தலைவராகிய நங்காதலர்; களவொழுக்கம் மேற்கொண்டு பலகாலும் இங்கு வருதலால் அவரும் நாணமெய்தி இனி இவ்விடத்தை நோக்காதபடி நமக்குப் பகைவராயுள்ள ஏதிலாட்டியரும் சேரியம் பெண்டிரும் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுத்தான் மிகுதியாக உண்டன்றே!; ஆதலின் மாலைப் பொழுதிலே கடற்கரைச் சோலை சூழ்ந்த கழியிடத்து நீர் (உவா) வெள்ளமாகிப் பெருக; நீல நிறத்தையுடைய நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிய; அமைந்திராது அலையெழுந்துலாவுங் கடலகத்து மீன்களைத் தின்னுகின்ற பறவையின் கூட்டம் கானலின் கண்ணேயிருக்கின்ற தம்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று புகுதா நிற்றலையுடைய மாலையம் பொழுதை நினையாராய்; நம்மைக் கைவிட்டு அகன்ற அவர் முன்பு தங்கியிருந்த விடத்து; நாம் இருந்து பிரிவுக்கு மிக வருந்திப் பெறுதற்கு அரிய வுயிர் அழிந்துபோவதாயிருப்பினும்; அந் நோய் புறத்தார்க்குப் புலனாகாதபடி மறைத்துக்கொள்ளுதல் வேண்டும்; ஆதலால் யான் புலம்பாது ஆற்றியிருப்பேன்காண்!; அது காரணமாக நீ வருந்தாதேகொள்!

ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது. - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

நற்றிணை - 383. குறிஞ்சி

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள்,  5
அருளினை போலினும், அருளாய் அன்றே-
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,
ஓங்கு வரை நாட! நீ வருதலானே.  

உயர்ந்த மலை நாடனே! நீ எம் தலைமகள்பால் மிக்க அருளுடையை போலுகின்றனை யாயினும்; மலையின் தாள்வரையிலே தழைந்த கரிய அடியையுடைய வேங்கை மலராலே தொடுக்கப்பட்ட அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை; அணித்தாக ஈன்ற வயாநோய் பொருந்திய கரிய பெண்புலி பசியுழந்ததாக ; அதனை அறிந்த வலிய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் பிளவுபடுமாறு மோதிக் களிற்றியானையைக் கொன்று; இடியினுங் காட்டில் மேலாக முழங்காநிற்கும் அச்சமிக்க நடுயாமத்திலே; செறிந்த இருளான் மூடப்பட்ட கருதினார்க்கு நடுக்கம் வருகின்ற நெறியின்கண்ணே; பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லுகின்ற இடி இடிக்கும் பொழுது நீ எங்களை நினைத்து வருதலானே; அருளுடையை அல்லை காண்!

தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது. - கோளியூர்கிழார் மகனார் செழியனார்

நற்றிணை - 384. பாலை

பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்  5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி- என் நெஞ்சே!- நாண் விட்டு
அருந் துயர் உழந்த காலை  10
மருந்து எனப்படூஉம் மடவோளையே.  

எமது உள்ளமே நீ வாழ்வாயாக!; நாணமென்பது குறுக்கே தடுப்பின் அப்பொழுது காம நோயைத் தீர்க்கும் நெறியின்றி அரிய துன்பம் எய்தி யாம் வருந்தியவழி அத் துன்பநோய்க்கு மருந்தெனப்படாது நாணம் விட்டு நெருங்கிய காலத்து அக் காம நோய்க்கு மருந்தெனப்படுகின்ற; மடப்பத்தையுடைய இவளை; வளவிய புறத்தையும் சிவந்த காலையுடைய புறவின் சேவல் களரியில் உயர்ந்து வளர்ந்து கவையாகிய முள்ளையுடைய கள்ளியின் தலையிலே சுள்ளிகளையடுக்கி அமைத்த குடம்பையின்கண்ணே; பிள்ளைகளை யீன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய வருந்திய நடையுடைய பேடையாகிய புறவு; உண்ணும் பொருட்டு; வேற்றரசர் படையொடு வந்து பொருது பகைமுனையிலே சென்று எல்லாவற்றையும் கவர்ந்து சென்றொழிந்ததனாலே மாந்தர் யாருமின்றி முதிர்ந்த பாழ் நிலத்திலே தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்றுக் கொணர்ந்து கொடுக்காநின்ற மாண்பு சிறிதும் இல்லாத நெடுங்தூரத்திற்கு அப்பாலுள்ள நாட்டுக்குச் செல்லும் நெறியின்கண்; நல்ல நாட்காலையின் மலர்ந்த வேங்கை மரத்தின் பொன்போன்ற புதிய பூக்கள்; உதிர்ந்து பரவிக்கிடப்ப அப் பரப்பின்மீது அன்னப்பறவை நடப்பது போல நடக்க அதனை நாம் நேரே கண்டு மகிழ்ந்தோம்; அவ்வாறே இனி நீயுங் காண்பாயாக!

உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 385. நெய்தல்

எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால்,  5
பொழுதன்றுஆதலின், தமியை வருதி:
எழுது எழில் மழைக்க..............  

கிடைத்த படிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது ; இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை.

நற்றிணை - 386. குறிஞ்சி

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்.  5
அணங்குடை அருஞ் சூள் தருகுவென் என நீ,
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என,
தெரிந்து அது வியந்தனென்- தோழி!- பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.  10


தோழீ! சிறிய கண்ணும் பெரிய சினமுமுடைய ஆண்பன்றிகள் நிரம்பிய, மாலையணிந்த கானவர் உழுது விளைத்த; வளைந்த தினைக்கதிரைத் தின்று பக்கத்திலுள்ள மலைப்பிளப்பினைத் தனக்குத் தங்குமிடமாக உடைய புலிக்கு அஞ்சாது; மூங்கில் வளர்ந்த மலைச்சாரலில் உறங்காநிற்கும் மலைநாடன; ஒரு பொழுது நின்பாற் போந்து இன்னதொரு நாளில் வந்து நின்னை வரைந்து கொள்வேன் அதற்குச் சான்றாக முருகவேள் முதலாயினாரைச் சுட்டியுந் தொட்டும் யாருங் கருதலரிய சூள் செய்து தருவேன் என்றலும்; அதனைக் கேட்ட நீ அவரை நோக்கி, நின்னோடொத்த ஒருதன்மையோர் இத்தகைய சூள் புகலார் பெருந்தகைமை யென்பது நின் மாட்டில்லையாகலின் நீ சூளுறத் துணிந்தனை என்று கூற; அஃது உண்மையெனக் கொண்டிருந்த யான் பின்பு ஒருபொழுது நமது மலையகத்து விளங்கிய சிறுகுடி பெருகிப் பொலிவடைய அவர் அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வதுவை யயர்தும் என்றும் வந்தநாளில்; அதனையறிந்து இவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர் என வியந்தனென்காண்!

பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புகுவலென முற்பட்டாள் தலைமகள்மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்தும் பிறிதொன்றன்மேல் வைத்துப் பாவியேன் இன்று பேதைமை செய்தேன் எம்பெருமாட்டி குறிப்பு உணர்ந்து ஆவேன்மன்னோ வழிப்படுவேன் எனச் சொல்லியது.

நற்றிணை - 387. பாலை

நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர்  5
வருவர் வாழி- தோழி!- செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
நெடும் பெருங் குன்றம் முற்றி,  10
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.  

தோழி! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக; யாவரும் அஞ்சும்படி போர் வென்று தலையாலங்கானத்துச் சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலேயிருந்து ; உறையினின்று நீக்கிய வாள் போலமின்னி; உவ்விடத்தே பாராய்; நெடிய பெரிய மலையைச் சூழ்ந்து முழக்கம் மிக்க மேகம்; விரைந்து மழையைப் பெய்யாநின்றது; இப் பருவத்தினை நோக்கியவுடன் வெறுத்தொழிந்த மாலையையுடைய தந்தொழிலன்றிப் பிற கல்லாத வீரர் பயிலாது ஏந்திய செவ்விய அம்பினை வில்லினின்றும் விடுதலானே அஞ்சி யாரும் நெருங்குதற்கரிய குறுக்கிட்ட கவர்த்த வழியையுடைய; சென்று சேர்தற்கியலாத சுரத்தின்கண்ணே முன்பு சென்ற காதலர்; விரைவில் வாராநிற்பர்; அங்ஙனம் அவர் வருதற்குள்ளாக நீ வருத்தமுற்று நெறித்த கரிய கூந்தலினும் நெடிய தோளினும் நாள்தோறும் பழமையாயுள்ள அழகெல்லாவற்றையுங் கெடுத்துக்கொள்ளாதொழிவாய்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது. - பொதும்பில் கிழார் மகனார்

நற்றிணை - 388. நெய்தல்

அம்ம வாழி, தோழி!- நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே- நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக்  5
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?  10

தோழி வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; வன்மைமிக்க புரிகளான் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற ஈட்டியையுடைய நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே செல்லுகின்ற பரதவர்; ஒள்ளிய விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு நடுயாமத்து வேட்டைமேற்சென்று; கடலிலே பிடித்த மீன்களை விடியற்காலையில் கொண்டுவந்து; கழிக்கரைச் சோலையின்கண்ணே குவித்து; உயர்ந்து கரிய புன்னை மரங்களின் வரியமைந்த நிழலிலிருந்து; தேன் மணம் வீசும் தௌபிந்த கள்ளை அருகிலே தம் உறவினருடன் கூடிப்பருகி; அளவில்லாது மிகவும் மகிழ்ந்து வைகும் கடலின் துறையையுடைய தலைமகன்; எமது சிறிய உள்ளத்தினின்று நீங்குதல் கற்றறிந்திலனாதலின் எப்பொழுதும் எம்முள்ளத்தூடே இராநின்றனன்; அங்ஙனம் அவன் எம்மைப் பிரியாது உறைதலானே எமது நல்ல நுதலின் கண்ணே பசலை எவ்வாறு உண்டாகாநிற்கும்; அதனை ஆராய்ந்து கூறிக் காண்!

வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

நற்றிணை - 389. குறிஞ்சி

வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்-
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென,  5
சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு  10
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.  

எம் தந்தையானவன் களிற்றியானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய கொலைத் தொழிலன்றிப் பிற கல்லாத ஏவன் மக்களாகிய வீரருடனே; விலங்கின்பின் வேட்டைமேற் சென்றதனாலே; சிறிய கிளிகள் கொய்தழிக்கின்ற பெரிய கதிர் களையுடைய தினைப்புனம் இனி உன்னாலே காவல் செய்யப்படுவதாக என்றனள்; அதுமுதலாக நாம் அதன் கண்ணே காவலோம்பி வருங்காலைச் சிலம்பிலே சென்ற கிளைகின்ற கோழி தன் சேவலுடனே பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்த புழுயிடையே; மிகப் பலவாகிய நல் பொன் ஒளிவீசாநின்ற நாடனுடன்; அன்பு மிக்க காமமே தலைக்கீடாக யாம் தொடர்ச்சியுடையேம் ஆயினேம், வேங்கையும் புலி ஈன்றன அங்ஙனமாகிய தொடர்ச்சி விரைவினீங்குமாறு தினை கொய்யுங்காலம் புலிபோன்ற பள்ளிகளையுடைய மலர் அரும்பி மலர்ந்தன; அருவிகளெல்லாம் தேன்மணமிக்க நெடிய மலையிடத்தில் நீலமணி போலத் தௌபிவடைந்தன; தினை கொய்யுங் காலமும் மணம்புரியுங் காலமும் ஒருசேர வந்தமை கருதிப் போலும் எம் அன்னை அமர்ந்து நோக்கி நின்றனள்; இனி நமது தொடர்பு யாதாய் முடீயுமோ? அறிகின்றிலேன்!

பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

நற்றிணை - 390. மருதம்

வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,  5

விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;
யாணர் ஊரன் காணுநன்ஆயின்,
வரையாமைஓ அரிதே; வரையின்,
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
 10
அளிய- தோழி!- தொலையுந பலவே.  

தோழீ! வாளைமீன்கள் வாள்போலப் பிறழாநிற்ப அவற்றை இரையாக உண்ணக் கருதாது நாள்தோறும் பொய்கையிலுள்ள நீர்நாய் தங்கிய துயிலை ஏற்றுப் பொருந்தாநிற்கும்; கை வண்மையுடைய கிள்ளிவளவனது கோயில்வெண்ணியைச் சூழ்ந்த வயலிலுள்ள வெளிய ஆம்பலின் அழகிய நெறிப்பையுடைய தழையை; மெல்லிதா யகன்ற அல்குலின் மேலே அழகுபெற உடுத்து யானும் இங்கு நடக்கின்ற விழாக் களத்தின்கண்ணே செல்ல வேண்டும் முன்னமே கருதாமையின் அது வீணே கழிந்தது; இப்பொழுது இவ்விளமகள் தோற்றப் பொலிவோடு செல்லுதலைப் புதுவருவாயினையுடைய ஊரன் காண்பானாயின் ஏனையோரை ஏறட்டுப் பாராது இவளையே கொண்டுசெல்லாநிற்கும், அங்ஙனம் கொள்ளாது விடுதலரிதேயாம்; கொண்டு சென்றொழிந்தாலோ வரைபோல்கின்ற யானையும் வாய்மையுமுடைய முடியனது மலையிலுள்ள மூங்கில்போன்ற இவனுக்குரிய இல்லுறை மாதாந்களின் நல்ல தோள்கள்; பல தம் நலனிழப்பனவாகும்! கருதின் அவை இரங்கத்தக்கன:

பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம். - அவ்வையார்

நற்றிணை - 391. பாலை

ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே-
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்,  5
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்
யாரோ பிரிகிற்பவரே- குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே?  10

மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தௌபிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்ந்த தலையையுமுடைய எருமைமாடு; அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; நின்னைவிட்டுப் பிரிபவர் யார்?

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 392. நெய்தல்

கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்,  5
பெண்ணை வேலி, உழை கண் சீறூர்
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல;
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம்- பானாள்,
முனி படர் களையினும் களைப;  10
நனி பேர் அன்பினர் காதலோரே.  

கொடிய சுறாமீனை வலையிட்டுப் பிடிக்கின்ற கடிய முயற்சியுடைய தந்தை; நீர்க்காக்கைகள் ஒலிக்கின்ற பெரிய கடலின்கண் வேட்டைக்குச் செல்கின்றவன் உடன்கொண்டு செல்லானாய் நிறுத்திவிட்டுச் சென்றதனாலே; மனையின்கண் இருந்தபடி தந்தையுடன் செல்ல விரும்பி அழுதுநின்ற மெல்லிய தலையையுடைய சிறுவர்; ஆங்கு விரைய முயற்சியாலே கிடைத்த இனிய கண்ணையுடைய பனைநுங்காகிய பருத்தமைந்த விருப்பம் வரும் கொங்கையின் பயனைப்பெற்று மகிழாநிற்கும்; பனையோலையிட்டு விசித்த வேலி சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய சிறிய ஊரிலுள்ள நல்ல நமது மனையகத்தை நங்காதலர் அறியின்; நல்லதேயாம், அஃது அனைவேமும் விரும்பத் தக்கதொன்றாம்; எவ்வாறெனின் அத்தகைய காதலர் நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலால்; இரவு நடு யாமத்தில் நம்மை வருந்துந் துன்பத்தைப் போக்கவேண்டுமெனினும் அவ் வண்ணமே செய்யவல்லவர்காண்; அவர் தாம் செம்மாப்புற்ற உள்ளத்துடனே முன்பு வந்து நின்னை முயங்கி அகன்ற கடற்கரைச் சோலையிடத்துள்ள குறியை இப்பொழுது வந்து கண்டு நின்று அழிகின்றனர் போலும்;

இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 393. குறிஞ்சி

நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி  5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன்,  10
நேர்வர்கொல் வாழி- தோழி!- நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?  

தோழீ! வாழ்வாயாக!; நீண்ட மூங்கிலுயர்ந்த நிழல் மிக்க மலையில்; முதிர்ந்த சூலினையுடைய வலிய பிடியானை தான் கன்றையீன்று வருந்தாநிற்ப; பால் மடி சுரந்த பசிய ஈன்ற அணிமையினாலுண்டாகிய பசிநோயைத் தீர்க்க வேண்டி; மகிழ்ச்சி மிக்குக் கரிய களிற்றியானை வளைந்த தினைக்கதிரைக்கொய்து கொண்டு போதலாலே; கானவன் கண்டு எறிந்த விரைந்த செலவினையுடைய எரி கொள்ளி; மூங்கில் நிரம்பிய மலைப்பக்கமெங்கும் விளங்கும்படி மின்னி; விசும்பினிடத்தில் நிலை பெற்றிராது தோன்றி மறைகின்ற மின்னலைப்போலத் தோன்றாநிற்கும் மலை நாட்டினராகிய நம் காதலர்; இரவில் வருதலாலாகிய துன்பத்தினின்று நாம் பிழைக்கவேண்டி; அவர் புதியராய் வரும் வருகையும் நின் வதுவைக்காக நீ நாணி ஒடுங்கியிருக்கும் ஒடுக்கமுங் கண்டக்கால்; அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வரைவதற்கு வந்த வாய்மொழிக்கு ஏற்குமாறு; நம் சுற்றத்தார் மகட்கொடைக்கு உடன்படுவர் போலும், அங்ஙனம் உடன்படுவாராயின்; அவர்தாம் நம் காதலரொடு மகிழ்ந்து பேசுவரோ?; நேர்ந்து பேசுவரெனின் அது மிக்க நன்மையாகுங் காண்;

வரைவு மலிந்தது. - கோவூர் கிழார்

நற்றிணை - 394. முல்லை

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,
வன் பரல் முரம்பின், நேமி அதிர,  5
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?  10

மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடமகன்ற காட்டின்கண்ணே வாடிய ஞெமையின் மீதிருந்த பேராந்தை; பொற் கொல்லன் தொழில் செய்வதினெழுகின்ற ஒலிபோல இனியவாய் ஒலியாநிற்ப; பூட்டிய மணிகளொலிக்கும் அருங்கலம் விளங்கிய தேரினுருள்; சுரத்தினுள்ள மேட்டு நிலத்தின்கண் அதிர்ந்து செல்லாநிற்ப; முன்பு இத் தோன்றல் முன்பனி நாளிலே சென்றனன்; இப்பொழுது சுரத்திடையே மேகம் எழுந்து உலாயதெனக்கொண்டு கார்ப்பருவம் வந்திறுத்ததென; தன் காதலியை ஆற்றுமாறு மீள்வானாகித் தன் மார்பிற் குறிய புள்ளிகளமைந்த பூசிய சாந்தத்தினுங் காட்டில் நறிய குளிர்ச்சியுடையனாய் வாரா நின்றான்கண்டீர்!; இவன் வாழ்வானாக! யான் இதற்கு நோவேனோ? நோவேனல்லேன்! மகிழ்வேன் மன்;

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம். - அவ்வையார்

நற்றிணை - 395. நெய்தல்

யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு
யாரையும் அல்லை; நொதுமலாளனை;
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன,  5
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மாந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே.  10

நண்பனே! யாரை நட்பாகவுடையை? நீ எமக்கு யாராந் தன்மையுடையை?; ஆராயின் நட்புடையாரையும் போல்வாயல்லை! அயலானாயினை!; எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் இயலை ஆராயப் புகின் அஃது அத் தன்மையதேயாகும்; கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரையுமுடைய குட்டுவன்; பகைவேந்தரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே அவனது வெற்றிமுரசு அதிர்ந்தாற்போன்ற ஒலியையுடைய; அலையுயர்ந்து வருகின்ற கடலிலே பாய்ந்து விளையாட்டயர்ந்து நீராடுமகளிர்; அணிந்து கழித்தெறிந்த பலவாய மலர்களைப் பொருந்தித் தின்ற முதிர்ந்த பசு; மீண்டு தான் உறைகின்ற புலத்துட் புகாநின்ற பெரிய இசையையுடைய மாலைப்பொழுதை எதிர் கொள்ளுகின்ற; கடற்கரையின்கண் விளங்கிய மாந்தை நகர்போன்ற எம்மை; விரும்பி யொழுகுவாயல்லையாதலின்; நின்னாலிழந்த எமது நலனைக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்லுவாயாக!

நலம் தொலைந்தது எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது. - அம்மூவனார்

நற்றிணை - 396. குறிஞ்சி

பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை  5
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே- பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி,  10
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?  

மழையைப் பெய்தொழிந்து செல்லும் மேகமெல்லாம் தாம் முன்ப தங்கியிருந்த மலையின்கண்ணே சென்று தங்காநிற்ப; தேனிறால் தூங்குகின்ற உயர்ந்த வெற்பினின்று அருவி ஆரவாரித்து வீழாநிற்ப; வேங்கைமரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல நாட்காலைப் பொழுதிலே பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலிருந்து அளாவி; நறுமணம் வீசும் மகரந்தத்தில் அளைந்த அழகு பெற்ற மயில்; பசிய கற்பாறையி னுச்சிமீது தன் கூட்டத்தோடு கூடி; ஆதித்தனது மிக்க கதிரையுடைய இளவெயிலைத் துய்க்கின்ற மலைநாடனே!; நினது மார்பினால் வருத்தப் பெற்ற இன்னாமை நீங்குதற்கரிய காமநோயை யான் யாரிடத்து நொந்து கூறாநிற்பேன்?; நீ வந்து புணரும் பல நாளும் மிக இனிய வார்த்தைகளை யான் விரும்பும்படி சொல்லி இங்ஙனம் கூறியவழி நடத்தல் இவட்குக் காப்புடைத்தாகுமென்று அருளாயாய்; நீ மயக்கமுறாநின்றனை; இதனை யான் யார்க்கு நொந்து கூறாநிற்பேன்;

தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.

நற்றிணை - 397. பாலை

தோளும் அழியும், நாளும் சென்றென;
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;  5
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன் எனவே.  

காதலன் வருவதாகக் கூறிய பருவஞ் சென்றொழிந்ததனால்; என் தோளும் வாட்டமடையும்; நீண்ட நெறியையுடைய சுரத்துவழியை நோக்கி நோக்கி ஒளியற்று என் கண்களும் காணுதற்குரிய பொலிவழிந்தன; எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க மடைந்து வேறாகாநின்றது; நோயை வைத்து உயிர் நீங்காதாகலின் அந் நோயுங் காடேறிச் சென்றொழியாநின்றது; உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து இறுத்து விட்டது; இனி யான் எவ்வண்ணமாவேனோ? அறிந்திலேன்; இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பரென்பது உண்மையானே அந்த இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; அவ்வாறு இறந்துழி; எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்;

பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 398. நெய்தல்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே;  5
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் முன்,
சென்மோ, சேயிழை? என்றனம்; அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல், சிலவே- நல் அகத்து
யாணர் இள முலை நனைய,
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே.  10

அச்சஞ் செய்கின்ற அணங்கும் மறைத்துறையாதபடி இயங்கா நிற்கும்; விரிந்த கதிர்களையுடைய ஆதித்த மண்டிலமும் மேலைத்திசையிலே சென்று மறையாநிற்கும்; ஓரையாடிய மகளிர் தாமும் நீர் அலைத்தலாலே கலைந்த கூந்தலைப் பிழிந்து வடித்துத் துவட்சியுற்று அழகிய வயிற்றில் அறைந்துகொண்டு ஒருசேரக்கூடித் தம்மூர் புகுவாராயினர்; அன்னதொரு பொழுதில் யாம் பலவாய மலர்களையுடைய நறிய சோலையிடத்தே நின் காதலியைப் பாராட்டிச் சேயிழாய்! யாம் முன்னே செல்லா நிற்போம் வாராய்! என்று கூறினேமாக; அங்ஙனம் கூறுதலும் மெல்லிய சாயலையுடைய அவள்; தன் நல்ல மார்பின்கண்ணே காணுந்தோறும் புதியனவாகத் தோன்றுகின்ற இளைய கொங்கைமுகடு நனையும்படி; மாட்சிமைப்பட்ட குளிர்ந்த கண்கள் தௌபிந்த நீர்கொண்டு வடியாநிற்ப; யாம் கூறியதற்கு எதிர்; சிலவாய மொழியுங் கூறினாளில்லை ஆதலின்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயாக!

முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி எனச் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 399. குறிஞ்சி

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி  5
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ- தோழி!- நின் திரு நுதல் கவினே?  10

தோழீ! நின் சிறப்புடைய நெற்றியின் அழகானது; அருவியொலிக்கின்ற பெரிய மூங்கில் மிக்க சாரலில்; இரத்தம் போன்ற கமழ்கின்ற காந்தளம்பூ வரிகள் பொருந்திய அழகிய சிறகையுடைய வண்டுகள் உண்ணும்படி மலராநின்ற; அழகிய சிலம்பின் கண்ணே; பன்றி பறித்தலானே நிலத்திலே கிடந்து வெளியிற்போந்து விளங்கிய பலவாய மிக்க அழகிய மணிகளின் ஒளிவிடுகின்ற விளக்கத்திலே; கன்றையீன்ற இளைய பிடியானை தன்னைக் களிற்றியானை அயலிலே காத்துநிற்பத் தன் கன்றொடு வதியா நிற்கும்; கரிய மலை நாடன்; தானே விரும்பினனாகி வருகின்ற பெருமையுடையள் என்பதைத் தராநிற்குமன்றோ? அங்ஙனந் தருமாதலின் அதனை வேறுபடுத்துக் கொள்ளாது விரைய வரையுங்காண்;

நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, எம்பெருமான் இதற்காய நல்லது புரியும் என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம்வேண்டு மென்றாற்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.

நற்றிணை - 400. மருதம்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,  5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.  10

?வாழையின் மெல்லிய தாற்றின் நுனியில் நாலும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற; நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில்; கதிரறுக்கும் மள்ளர் அறுத்துப் போகட்ட அரிச்சூட்டின் பக்கத்தில்; பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே!; நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின்; இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை!; ஆதலின் மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து; அறம் கெடவறியாது நின்று நிலைபெற்றாற் போன்று; நீதான் சிறந்த நட்புடனே அளாவி என்னெஞ்சினின்று நீங்குந் தன்மையைக் கற்றறிந்தா யல்லை! அதனால் நீ உளனாயிருப்பின் யான் உளனாவேன் காண்!;

பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், நின் இன்று அமையாம் என்று சொன்னமையான் என்பது. - ஆலங்குடி வங்கனார்

நற்றிணை - 401. கடவுள் வாழ்த்து

மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய  5
வேத முதல்வன் - என்ப-
தீது அற விளங்கிய திகிரியோனே.  

பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும்; தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும்; ஆகாயம் மெய்யாகவும்; திசை கைகளாகவும்; தண்ணிய கதிர்களையுடைய திங்களும் ஞாயிறுமாகிய இரண்டும் இரண்டு கண்களாகவுங் கொண்டு; அமைந்துடைய எல்லாவுயிர்களிடத்தும் தான் பொருந்தி யிருப்பதன்றி; நில முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னுறுப்பகத் தடக்கிய வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள்; குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு.

பாரதம் பாடிய பெருந்தேவனார்.

 
மேலும் நற்றிணை »
temple news
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை. நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ... மேலும்
 

நற்றிணை (பகுதி-1) மார்ச் 21,2013

நற்றிணை - 1. குறிஞ்சி நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரேதாமரைத் தண் தாது ... மேலும்
 

நற்றிணை (பகுதி-2) மார்ச் 21,2013

நற்றிணை - 51. குறிஞ்சி யாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு ... மேலும்
 

நற்றிணை (பகுதி-3) மார்ச் 21,2013

நற்றிணை - 101. நெய்தல் முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை ... மேலும்
 

நற்றிணை (பகுதி-4) மார்ச் 21,2013

நற்றிணை - 151. குறிஞ்சி நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,கொல் முரண் இரும் புலி அரும் புழைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar