பதிவு செய்த நாள்
03
மே
2013
10:05
பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா மே 8ல் துவங்கி 21ல் நிறைவடைகிறது. இந்நாட்களில் சேலம், திண்டுக்கல், கரூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும், சுற்றுவட்டார கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் பழநி வருவர்.
மூலிகை காற்று: பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களின் வாச த்தை, நுகர்ந்தால், வயிற்றுவலி, உஷ்ணநோய் உட்பட பல்வேறு விதமான வெப்ப வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.விழா நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, பழநிகோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் செய்துவருகிறார்.
பழநி சரவணப் பொய்கையில் பக்தர்கள் குளிக்க தண்ணீர் ஏற்பாடு: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பழநி சரவணப் பொய்கையில் பக்தர்கள் குளிப்பதற்கு, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க, தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பழநி கோவில், சரவணப் பொய்கையில் உள்ள தீர்த்த கிணறு வறண்டதை பயன்படுத்தி, பக்தர்கள் குளிக்க, 20 லிட்டர் தண்ணீர் கேனை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்வது குறித்து, "தினமலர் நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பொறியாளர்களுடன் இணைக்கமிஷனர், சரவணப் பொய்கையில் ஆய்வு செய்தார். புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தாலும், தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என, தெரிய வந்தது. இதனால், பக்தர்கள் குளிப்பதற்கு, கோவில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.