பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
கும்பகோணம்: கும்பகோணம் நேரு, அண்ணாதுரை காய்கறி மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மார்க்கெட் தாராசுரத்தில் உள்ளது. இந்த காய்கறி சந்தையின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில், ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும், பால்குடம் எடுத்து, சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று, கோடை அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், பால்குடம், அலகு காவடி, விமானகாவடி, மேளதாளங்கள், கேரளா ஜெண்டை, வாடிப்பட்டி தப்பு, தேனாம்படுகை தப்பு, கோலாட்டம், மயிலாட்டம், தற்காப்புக்கலை, வாணவேடிக்கைகள் முழங்க, தாராசுரம் மார்க்கெட்டிலிருந்து புறப்பட்டு, தாலுகா போலீஸ் ஸ்டேஷன், மொட்டை கோபுரம், உச்சிப்பிள்ளையார் கோவில், யானையடி, மடத்துதெரு, காமாட்சி ஜோசியர்தெரு, மேலக்காவேரி, கொட்டையூர், பாபுராஜபுரம் வழியாக சுவாமிமலையை சென்றடைந்தனர்.
அங்கு சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமிக்கு கோடை அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதயாத்திரையாக சென்று பங்கேற்றனர்.