பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதிய கோபுரம் அமைப்பதற்கான பணிகள் இன்று தொடங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று வடிவீஸ்ரம் அழகம்மன் கோயில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் பழங்கால கட்டிட கலைகளின் எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. இங்கு சிவனும் பார்வதியும் ஒருங்கே இணைந்து அழகம்மனாக அருள்பாலிப்பதாக வரலாறு கூறுகிறது. வடிவீஸ்வரம் கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இக்கோயில் அமைந்துள்ளது. வடிவீஸ்வரம் என்ற பெயரும் இந்த கோயிலின் வரலாற்றுடன் இணைந்துள்ளது. "வடிவு என்றால் "அழகு. "ஈஸ்வரா என்பது "சிவன். இப்படி கோயிலின் கடவுள் பெயருடன் இணைந்து இந்த கிராமத்தின் பெயர் அமைந்துள்ளது.
தேவபிரஸ்னம்: அழகம்மன், சிவன் இங்கு முக்கிய கோயில்களாகும். கணபதி, விஷ்ணு, முருகன், சனீஸ்வரன், நடராஜர் என முக்கிய சன்னதிகளும் இங்கு உள்ளது. சனீஸ்வரருக்கு பிரதிஷ்டை உள்ள அபூர்வ கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு நான்கு வாசல்களிலும் கோபுரம் அமைக்க முடிவு செய்ய பக்தர்கள் விரும்பியதை தொடர்ந்து "தேவபிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் கோபுரம் அமைக்கலாம் என்று முடிவு வந்ததை தொடர்ந்து புதிய கோபுரத்துக்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டது. இதற்கு இந்து அறநிலையத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து புதிய கோபுரத்துக்கான பணிகள் இன்று காலை தொடங்குகிறது. காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் புதிய கோபுரத்துக்கான கால்கோள் பணிகள் நடக்கிறது. இதில் அருள்மிகு அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வர பக்த சேவாசங்க நிர்வாகிகளும், பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
பணிகளுக்கு நன்கொடை: கும்பாபிஷேக பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் IOB,Meenakshipuram branch, Nagercoil. A/C No:133601000099990 IFSC CODE:IOB A0001336 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு info@azhagammantemple.com என்ற இமெயில் முகவரியிலும், 98410 24125, 88253 60494 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.