பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
தமிழகத்தில் உள்ள, அனைத்து கோவில்களுக்கும், தல வரலாற்றை பதிப்பிக்கும் பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இந்த ஆண்டுக்குள், தல வரலாறு பதிப்பிக்கும் பணி, முடிவடையாது என, தெரிகிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் தல வரலாறும், தல புராணமும் அவசியம். "குறிப்பிட்ட பகுதியின் வரலாற்றை அறிய வேண்டுமெனில், அப்பகுதியில் உள்ள கோவிலின் வரலாற்றை அறிந்தாலே போதும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவர். எனவே, ஒவ்வொரு கோவிலுக்கும், தல வரலாறு அவசியம். குறிப்பிட்ட கோவில், யாரால், எப்போது கட்டப்பட்டது; அதில், திருப்பணி, உழவாரப்பணி செய்தவர்கள் யார்; பாடல் பெற்ற தலமாக இருந்தால், யார், எப்போது பாடியது; எத்தனை கல்வெட்டு கோவிலில் உள்ளது; அதில், முக்கியமான கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகள்; கோவில்களில், எந்தெந்த காலக் கட்டத்தில், குடமுழுக்கு நடத்தப்பட்டது போன்ற தகவல்கள் அடங்கி இருந்தால், அதுவே முழுமையான தல வரலாறு. இது, கோவிலின் வரலாற்றுச் சிறப்பை விளக்குவதற்கு மட்டுமின்றி, பிற்கால தலைமுறைக்கு, நம் வரலாற்று பெருமையை எடுத்துரைக்கும் பொக்கிஷமாக அமையும்.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில் தல வரலாறை, அந்தந்த கோவில் நிர்வாகத்தினரே அச்சடிக்கின்றனர். குறிப்பிட்ட கோவில் அமைந்துள்ள பகுதியில், சிறப்பு பெற்ற, ஆன்மிக எழுத்தாளர், தல வரலாற்றை எழுதுவர். அதை கோவில் நிர்வாகம் சரிபார்த்த பின், அப்பகுதியில் உள்ள அச்சகத்தில், அச்சடிக்கப்படும். பல ஆண்டுகளுக்கு முன், அச்சடிக்கப்பட்ட தல வரலாறு, மறு பதிப்பு செய்யப்படாமல் உள்ளது. அவற்றை மீண்டும் மறுபதிப்பு செய்ய வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆறு மாதத்திற்குள், அனைத்து பதிப்பு பணிகளையும் முடிக்க வேண்டும் என, கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை இத்திட்டம் துவங்காமல் உள்ளது. இதனால், கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்து, இந்த ஆண்டு இறுதி வரை, பணிகள் நடக்கும் என, தெரிகிறது. இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், தனபாலிடம் கேட்ட போது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.- நமது நிருபர் -