திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. மே 15 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் மூன்று திருத்தேர்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தேர்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். மாலை 3.48 மணிக்கு பிரான்மலை வகை ஐந்து கோயில் தேவஸ்தான ஆதீன கர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முதல் தேரான விநாயகர் தேரை சிறுவர்கள் உற்சாகத்துடன் வடம் பிடித்து, இழுத்துச் சென்றனர். இன்று (மே24) சீதளி தெப்பக்குள மண்டபத்தில் சுவாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார். இத்துடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவடைகிறது.