பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
திருவாரூர்: ஆலங்குடி சுவாமிகளின், 78வது ஆராதனை மகோற்சவ விழா, நேற்று நடந்தது.திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி பெரியவர் என்று பிரசித்தி பெற்ற சுயம்பிரகாச சரஸ்வதி சுவாமிகள், காவிரிக்கரையோர கிராமங்களில், யாத்திரை செய்து, கற்பக விருஷத்தின் பாலசாரமாகிய ஸ்ரீமத் பாகவாத கிரந்தத்தை, சப்தாகம் மூலம் பரவ செய்தார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே முடிகொண்டானில், 1935ம் ஆண்டு நரசிம்ம ஜெயந்தியில் முக்தியடைந்தார். இதையடுத்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாணைப்படி, ஆண்டுதோறும் முடிகொண்டானில், ஆலங்குடி சுவாமிகளின் நினைவிடத்தில், ஆராதனை மகோற்சவம், அன்னதானம், இயலாதவர்களுக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை, வெகு விமர்சியாக செய்து வருகின்றனர். தற்போது, 78வது ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு, கடந்த, 16ம் தேதி முதல், தினசரி பகலில், பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அஷ்டபதி பஜனையும், மாலையில், ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும் நடந்தது. ஆராதனை நாளான, 23ம்தேதி, சுவாமிகளின் நினைவிடத்தில், பாகவத பாராயணம், வேதபாராயண பூர்த்தி, அதிஷ்டான பூஜை, தொடர்ந்து சமாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா டிரஸ்ட்டி தலைவர் சுந்தரம் தலைமையிலான, விழாக் குழுவினர்களான, செயலர், சங்கரநாராயணன், பொருளாளர், ஸ்வாமிநாதன், ஸ்ரீசாஸ்தா பல்கலைக்கழக ஸ்ரீ வைத்திய சுப்ரமணியன், தண்டபாணி மற்றும் ஸ்ரீ ஆலங்குடி ஸ்வாமிகள் ஆராதனை சபா ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாலையில், சுவாமிகளின் உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது.