பதிவு செய்த நாள்
30
மே
2013
10:05
திருத்தணி: திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருத்தணி அக்கய்யா நாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. இதற்காக,கோவில் வளாகத்தில் மூன்று யாக சாலைகள் மற்றும், 108 கலசங்கள் அமைக்கப்பட்டு, கடந்த, 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.கோவில் குருக்கள் நடராஜ சாஸ்திரி தலைமையில், நேற்று முன்தினம் ஐந்து குருக்கள் நவக்கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் தனபூஜை, இரண்டாம் கால பூஜை, சாந்தி பூஜை, மாலை, 6:00 மணிக்கு மூன்றாம்கால பூஜை மற்றும் தீபாராதனை நடத்தினர்.இதையடுத்து, நேற்று காலை, 6:00 மணிக்கு சுமங்கலி பூஜை நடந்தது. காலை, 9:50 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.காலை, 10:30 மணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கலசநீரை அங்கு கூடிஇருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:30 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் அலங்கரிப்பட்ட டிராக்டரில் எழுந்தருளி நகரத்தின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த கும்பாபிஷேக விழாவில், நகர்மன்றத் தலைவர் சவுந்தர்ராஜன், கவுன்சிலர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.