பதிவு செய்த நாள்
01
ஜூன்
2013
10:06
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார மண்டபம் சீரழிந்துள்ளது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.முதல் ஆழ்வார்கள் மூன்று பேரில், இரண்டாமவராக புகழ்பெற்றவர் பூதத்தாழ்வார். 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமான மாமல்லபுரம், பூதத்தாழ்வார் அவதார தலமாகவும் விளங்குகிறது.இங்கு ஸ்தலசயனப்பெருமாள் கோவில் அருகில், நந்தவனத்தில் பூத்த குருக்கத்தி மலரில், கதாயுத தோற்றத்தில், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில் பூதத்தாழ்வார் அவதரித்தார்.அவதார மண்டபம்இரண்டாம் திருவந்தாதி, நாலாயிர திவ்விய பிரபந்த பாடல்கள் இயற்றி, ஸ்தலசயனப் பெருமாளை போற்றிப் பாடிஉள்ளார்.இக்கோவிலில், அவருக்கு தனி சன்னிதி உள்ளது. அவர் தோன்றிய நந்தவன பூங்காவில், அவதார மண்டபம் மற்றும் தீர்த்தகுளம் உள்ளது.பிரம்மோற்சவ நாளில், இங்கு ஸ்தலசயனப் பெரு மாளுக்கு, மண்டகப்படி வசந்த உற்சவம் மற்றும் பூதத்தாழ்வார் அவதார உற்சவ நாளில், பெருமாள் மற்றும் ஆழ்வாருக்கு, அபிஷேகம் நடைபெறும். இங்குள்ள தீர்த்தகுளத்தின் நீர், தினமும், ஸ்தலசயனப் பெருமாள் கோவில், முதல்கால வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படும்.அலங்கார தூண்கள்இத்தகைய சிறப்பு வாய்ந்த அவதார மண்டப வளாகம், நீண்ட காலமாக பராமரிப்பின்றி, சீரழிகிறது. இவ்வளாகம், 1.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வளாக மைய பகுதியில், 12 அலங்கார கல்தூண்கள் தாங்கி நிற்கும், அவதார மண்டபம் அமைந்துள்ளது.இதன் கிழக்கில், தீர்த்தகுளம் உள்ளது. குளத்தின் தென்மேற்கு கரையில், பூதத்தாழ்வார் உருவம் பொறித்த, கல்தூண் உள்ளது. வளாக நுழைவாயிலில், தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உறியடி மண்டபம் (தோலோற்சவ மண்டபம்) உள்ளது.விஜயநகர பேரரச காலத்தில் கட்டப்பட்ட இம் மண்டபம், முறையான பராமரிப்பின்றி, 50 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்தது. இதன் மேல்தளம், தரைத்தளம், அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கற்கள், சில தூண்கள் பெயர்ந்துள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பே, பூஜைகள் நிறுத்தப்பட்டன. நாளடைவில், இப்பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து, காடாக மாறியது. குளமும் தூர்ந்து, அருகாமை குடியிருப்பு பகுதியின் கழிவுநீர் தேங்கும் இடமாக மாறியது.பராமரிப்பு இல்லைஇப்பகுதியை சீரமைத்து, பூஜைகளை தொடர பக்தர்கள் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, சென்னை ரோட்டரி சங்கம் சார்பில், குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டது.கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின், ஒரு முறை மட்டுமே உற்சவம் நடத்திய கோவில் நிர்வாகம், மீண்டும் அதை தொடரவில்லை. இதனால், மண்டபம், தீர்த்தகுளம் ஆகியவை, தற்போது மோசமாக சீரழிந்துள்ளது கண்டு பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், ""பூதத்தாழ்வார் அவதரித்த ஆன்மிக தலம், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்குள்ள மண்டபம், குளம் ஆகியவற்றை சீரமைத்து, வழிபாட்டை தொடர்ந்து நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.புனரமைக்க முடிவுஇதுகுறித்து, ஸ்தலசயனப்பெருமாள் கோவில் நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகையில், ""அவதார மண்டபத்தை முழு வதுமாக பிரித்து, 12.39 லட்ச ரூபாய் மதிப்பில், புனரமைக்க முடிவெடுத்துள்ளோம். அரசு, 8 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. கோவில் நிதியில், 4.39 லட்சம் ரூபாய் செலவிடப்படும். பற்றாக்குறை நிதிக்கு, நன்கொடை பெறப்படும். இதற்கான ஒப்பந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.