பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி கம்பத்தடி மண்டபத்தில் புதிய தங்க கொடிமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இங்கிருந்த 150 ஆண்டு பழமையான கொடிமரம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக 56 அடி உயரமுள்ள, புதிய தேக்குக்கொடிமரம், ஜூன் 12ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பதிக்கப்பட்ட தாமிர தகட்டின் மேல் 11 கிலோ தங்கத்தை பயன்படுத்தி, தங்கரேக் ஒட்டும் பணி சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, புதிய தங்க கொடிமரத்திற்கு நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கொடிமரத்தின் உச்சியில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். அதிகாலை 5.55 மணிக்கு கொடிமரத்தின் படிபாதத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக புனிதநீர், கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்கள் புடைசூழ எடுத்து வரப்பட்டது.
அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், பழுதுபட்ட 150 ஆண்டு பழமையான கொடிமரத்திற்கு பதிலாக புதிய தங்கக்கொடிமரம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி, 11 கிலோ தங்கத்தால் புதிய கொடிமரத்தின் பக்கவாட்டு பகுதிகளில் தங்கரேக் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வழிபாட்டு தலங்களின் புனிதத்துவம் காக்க அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது, என்றார். அறநிலையத்துறை முதன்மை செயலர் ரா.கண்ணன், ஆணையர் ப.தனபால், கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் ஜெயராமன் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெ., வாழ்த்து செய்தி: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நான்மாடக் கூடலின் நடுவில் அமைந்துள்ளதும், பல புராண இலக்கியங்களை கொண்டதும், பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றதுமான, உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய தங்கக்கொடிமரத்திற்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். திருக்கோயிலில் கம்பத்தடிமண்டபத்தில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கொடிமரம் பழுதடைந்த காரணத்தினால் அகற்றப்பெற்று தற்போது புதிய தங்கக்கொடிமரம் அமைக்கப்பெற்றுள்ளது. கொடிமரத்தை வணங்கினால், கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம் என்பார்கள். ஆண்டவனை சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கமாகும். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கொடிமரத்திற்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா என்பது ஓர் அரிய நிகழ்வாகும். இப்படிப்பட்ட அரிய விழா, தமிழுக்கு பெருமை சேர்த்த மதுரை நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறுவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்புதிய தங்கக்கொடி மரம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இனிதே நடைபெற எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பக்தர்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருளுக்கு பாத்திரமாகி, அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று இன்புற வாழ வேண்டும், என வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.