பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
ஆழ்வார்குறிச்சி: கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் இன்று (15ம் தேதி) அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடையத்தில் வடக்கு ரதவீதியில்அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் கடந்த 11ம்தேதி காலை கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோபூஜையுடன் விழா துவங்கியது. இரண்டாம் நாள் ருத்ர ஹோமம், கன்னிகா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜையும், 3ம் நாள் காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் இருந்து 108 தீர்த்தம் எடுத்து ரதவீதி வலம் வந்து கோயிலை அடைந்தனர். மாலை முதல் கால யாகசாலை நடந்தது. 4ம் நாளான நேற்று காலை 8 மணியளவில் விசேஷ சந்தி, 2ம் கால யாகசாலை பூஜையும், 9 மணியளவில் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும், திருமுறை பாராயணமும் நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று (15ம் தேதி) காலை 7 மணியளவில் 4ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, காலை 9 மணியளவில் யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளலும், 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமானம், சாலக்கோபுரம் கும்பாபிஷேகம், விநாயகர், முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தலும், 9.30 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது.கும்பாபிஷேகத்தினை சங்கர்நகர் கணேச சிவாச்சாரியார், கடையம் கல்யாணசுந்தரபட்டர், முத்துக்குமாரசுவாமி பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர். கடையம் ஓய்வுபெற்ற தாசில்தார் கல்யாணசுந்தரம் யாகசாலை திருமுறைகள் நிகழ்த்துகிறார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன், தக்கார் வள்ளியம்மாள், முப்புடாதி அம்மன் பக்தர் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.