பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
10:07
சென்னை: பாரிமுனையில் உள்ள முத்துக்குமார சாமி கோவிலில், மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை பாரிமுனை ராசப்ப செட்டி தெருவில் உள்ள, கந்தகோட்டம் என, அழைக்கப்படும் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த மார்ச் 29ம் தேதி திருப்பணி துவங்கியது. கோவிலின் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களும் செப்பனிடப்பட்டு, பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு, கடந்த வாரம் திருப்பணி நிறைவடைந்தது. இதை அடுத்து, கந்தசாமி கோவில் மகாகும்பாபிஷேகம், நேற்று காலை நடைபெற்றது. பகல், 12:௦௦ மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு மகாகும்பாபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. மாலை, 5:௦௦ மணிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. இரவு, 8:௦௦ மணிக்கு முத்துக்குமாரசாமி, தங்கமயில் வாகனத்திலும், விநாயகர், சிம்ம வாகனத்திலும், வள்ளி, தெய்வானை நாக வாகனத்திலும், சொக்க நாதர், யானை வாகனத்திலும், ஆறுமுகசாமி, வெள்ளி ரதத்திலும், பாலசுப்பிரமணியர் தங்கத் தேரிலும் பவனி வந்தனர்.