பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
10:07
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி அடுத்த, கீழாந்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பெண்கள் கூழ்வார்த்து, பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மாலை, 6:15 மணிக்கு கோவில் எதிரில் உள்ள அக்னிகுண்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து, மஞ்சள் ஆடை அணிந்து தீ மிதித்தனர். பின்பு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. விழாவில், கீழாந்தூர், டி.புதூர், வளர்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, அம்மனை வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா சபாபதி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.