பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
10:07
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு கடந்த ஜூன் மாதத்தில் பக்தர்கள் சார்பில் சாற்றிய, 372 புடவைகள், 68 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு, தஞ்சை பெரியகோவிலில் ஏலம் விடப்பட்டது.தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வேன், கார், பஸ்களில் அதிகளவில் வருகின்றனர். இதுதவிர சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நடைபயணமாகவும் பெண் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பட்டு மற்றும் சாதாரண புடவைகளை பக்தர்கள் சாற்றுவது வழக்கம்.அதன்படி அம்மனுக்கு சாற்றப்பட்ட புடவைகள் சேகரிக்கப்பட்டு, பெரியகோவிலில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் ஏலத்தை மேற்பார்வையிட்டனர். ஏல முடிவில், கடந்த ஜூன் மாதத்தில் பக்தர்கள் அம்மனுக்கு சாற்றிய, 372 புடவைகள், 68 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.